தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன் - நடிகர் மகேஷ்பாபு


தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன் - நடிகர் மகேஷ்பாபு
x
தினத்தந்தி 21 April 2018 11:00 PM GMT (Updated: 21 April 2018 7:23 PM GMT)

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதாக நடிகர் மகேஷ்பாபு கூறினார்.

தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், மகேஷ்பாபு. இவர் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருந்தாலும், இவரை தமிழுக்கு நேரடியாக கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் டைரக்டு செய்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்’ என்ற படத்தில் உளவுத்துறை அதிகாரியாக மகேஷ்பாபு நடித்து இருந்தார். இந்த படம் தெலுங்கிலும் வெளியானது.

ஆனால், ‘ஸ்பைடர்’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தநிலையில், ‘ஸ்பைடர்’ படம் குறித்து நடிகர் மகேஷ்பாபு ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியதாவது:-

‘’ஸ்பைடர் படம் நடித்து முடித்து ‘ரிலீஸ்’ செய்த பின்னர்தான் சில தவறுகள் செய்திருந்ததை நாங்கள் உணர்ந்தோம். ஆனால், அந்த தவறுகளை சரிசெய்ய எந்த வாய்ப்புமே அப்போது எங்களுக்கு இல்லை. ஆனால், தவறுகளை நிச்சயமாக உணர்ந்தோம். தமிழில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தை அப்படியே தெலுங்கு மொழிக்கு எடுத்து சென்றோம். அந்த சமயத்தில் தெலுங்கு ரசிகர்களின் எண்ண ஓட்டத்துக்கேற்ப படத்தில் சில மாற்றங்களை செய்ய தவறி விட்டோம். அதில் இருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். இனி, இதுபோன்ற ஒரு தவறை என் வாழ்நாளில் செய்யக்கூடாது என்றும், ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்றும் முடிவு எடுத்து விட்டேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மகேஷ்பாபு நடித்து நேற்றுமுன்தினம் வெளியான ‘பாரத் அனி நேனு’ என்ற தெலுங்கு படம், ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story