நம்பிக்கையான வார்த்தைகள் கூறி ஆட்டோ டிரைவரை நெகிழவைத்த அமிதாப்பச்சன்


நம்பிக்கையான வார்த்தைகள் கூறி ஆட்டோ டிரைவரை நெகிழவைத்த அமிதாப்பச்சன்
x
தினத்தந்தி 21 April 2018 11:30 PM GMT (Updated: 21 April 2018 7:34 PM GMT)

ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு நம்பிக்கையான வார்த்தைகள் கூறி நெகிழவைத்த அமிதாப்பச்சன்.

உமேஷ் சுக்லா டைரக்‌ஷனில் இந்தியில் தயாராகி வரும் படம், ‘102 நாட் அவுட்’. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகி வரும் இந்த படத்தில், 102 வயது தாத்தாவாக அமிதாப்பச்சனும், அவரது 75 வயது மகனாக ரிஷிகபூரும் நடித்து வருகிறார்கள். குஜராத் மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சவும்யா ஜோஷியின் நாவலை தழுவி படம் தயாராகி வருகிறது.

இந்த படத்துக்காக ஒரு ஆட்டோவில் அமிதாப்பச்சன் பயணிப்பது போலவும், ஆட்டோ டிரைவருடன் அவர் ஜாலியாக பேசிக்கொண்டு வருவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்த சமயத்தில் அந்த ஆட்டோ டிரைவரின் தொழில் மற்றும் குடும்பம் குறித்து விசாரித்த அமிதாப்பச்சன், “வாழ்க்கையில் நான் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். ஆனாலும் தன்னம்பிக்கையை கைவிட்டு விடவில்லை. உழைப்பு எனக்கு பலனை தந்தது. அதேபோல் உங்கள் உழைப்பின் மதிப்பு உங்களை உயர்த்தும். கவலைப்படாதீர்கள்” என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறினார்.

முன்கூட்டியே எதுவும் பேசிக்கொள்ளாமல் எதார்த்தமாக அமிதாப்பச்சன் பேசியதையும், அதற்கு டிரைவரும் எதார்த்தமாக பதில் அளித்த காட்சியையும் ஒரே ‘டேக்’கில் படமாக்கினார்கள். மேலும் இந்த உரையாடல் இடம்பெறும் காட்சி உணர்ச்சிபூர்வமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்தி திரையுலகின் ஜாம்பவான் அமிதாப்பச்சன் மிகவும் எளிமையாக வாழ்க்கையின் அர்த்தத்தை எடுத்து கூறியதையும், நம்பிக்கை தரும் வார்த்தைகள் பேசியதையும் எண்ணி அந்த ஆட்டோ டிரைவர் நெகிழ்ந்து போனார்.

Next Story