“திருமணத்துக்கு பிறகும் சுதந்திரமாக நடிக்கிறேன்” -நடிகை சமந்தா


“திருமணத்துக்கு பிறகும் சுதந்திரமாக நடிக்கிறேன்” -நடிகை சமந்தா
x
தினத்தந்தி 27 April 2018 12:00 AM GMT (Updated: 26 April 2018 7:24 PM GMT)

திருமணத்துக்கு பிறகும் சுதந்திரமாக நடிக்கிறேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்த பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். விஷாலின் இரும்புத்திரை, சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள நடிகையர் திலகம் ஆகிய படங்கள் சமந்தாவின் நடிப்பில் திரைக்கு வர தயாராக உள்ளன. சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படங்களிலும் நடிக்கிறார்.

சினிமா அனுபவங்கள் குறித்து சமந்தா கூறியதாவது:-

“நான் சினிமாவுக்கு வந்த புதிதில் மிகவும் பயந்தேன். பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்பட்டது. நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பது, இல்லாவிட்டால் சினிமாவை விட்டு விலகி விடுவது என்று முடிவு செய்து இருந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு எல்லாமே நல்ல படங்களாக அமைந்தன. புதிது புதிதாக கதாபாத்திரங்களும் கிடைத்தன.

என்னை மனதில் வைத்தே டைரக்டர்கள் கதைகளை தயார் செய்து வந்தார்கள். இது உற்சாகத்தை கொடுத்தது. இப்போது எனது பாதையே மாறிவிட்டது. சொந்த வாழ்க்கையிலும் சினிமாவிலும் சந்தோஷத்தை அனுபவிக்கிறேன். ஒவ்வொரு படத்தின் வெற்றியையும் கொண்டாடுகிறேன். சமீபத்தில் வெளியான ரங்கஸ்தலம் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கணவர் குடும்பத்தினர் திருமணத்துக்கு பிறகும் என்னை சுதந்திரமாக விட்டு உள்ளனர். அவர்கள் ஆதரவினால்தான் சினிமாவில் தொடர்ந்து சாதிக்க முடிகிறது.”

இவ்வாறு சமந்தா கூறினார். 

Next Story