“சினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்கு உதவுவேன்” - நடிகர் சத்யராஜ்


“சினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்கு உதவுவேன்” - நடிகர் சத்யராஜ்
x
தினத்தந்தி 2 May 2018 10:45 PM GMT (Updated: 2 May 2018 8:56 PM GMT)

சினிமாவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளில், அவர்களின் பாதுகாப்புக்கு உதவுவதாக நடிகர் சத்யராஜ் கூறினார்.


திரைப்படத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடந்த இதன் தொடக்க விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:-

“சாஸ்திரம், சடங்குகள், பண்பாடு, கலாசாரம் போன்றவை பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. மதம், சாதி வேறுபாடுகளும் இதற்கு உதவுகின்றன. இவற்றில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும். பெண்கள் எதற்காக அடிமையாக்கப்பட்டார்கள் என்பதை அவர்கள் அறிய வேண்டும்.

திரையுலகில் இருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் கல்வி, பொருளாதாரத்தில் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் உயர்ந்தால்தான் உரிமைக்காக போராட முடியும். திரைத்துறை பெண்கள் பாதுகாப்பு அமைப்புக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.” இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

நடிகைகள் ரோகிணி, சச்சு, டைரக்டர்கள் பா.ரஞ்சித், புஸ்கர் காயத்ரி, பாலாஜி சக்திவேல், பி.சி.ஸ்ரீராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story