“திருமணத்துக்குப்பின், முத்த காட்சியில் நடித்தது தவறா?” -சமந்தா பேட்டி


“திருமணத்துக்குப்பின், முத்த காட்சியில் நடித்தது தவறா?” -சமந்தா பேட்டி
x
தினத்தந்தி 5 May 2018 10:30 PM GMT (Updated: 5 May 2018 8:56 PM GMT)

நடிகை சமந்தா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“விஷாலுடன் நான் நடித்துள்ள ‘இரும்புத்திரை‘ படம், விரைவில் திரைக்கு வருகிறது. தனிப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை திருடி தவறாக எப்படி பயன்படுத்துகிறார்கள்? என்பதுதான் கதை. என் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. நான் புதிய இயக்குனர்கள் படங்களில் நடிப்பது இல்லை. ஆனால் மித்ரன் இயக்கிய இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. ‘இரும்புத்திரை’ படத்துக்கு நான் ‘டப்பிங்’ பேச மறுத்ததாக பேசப்படுகிறது.

சினிமா ‘ஸ்டிரைக்’ முடிந்ததும் உடனடியாக படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தனர். அப்போது நான் தெலுங்கில் ‘மகாநதி’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அதனால் ‘டப்பிங்’ பேச முடியவில்லை. திருமணத்துக்கு பிறகு நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படம் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அதில் நான் நடித்த முத்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், எனது குடும்பத்தினர் கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு எனக்கு ஆதரவாக இருந்தனர்.

திருமணத்துக்கு பிறகும் ரசிகர்களிடம் என் படங்களுக்கு வரவேற்பு உள்ளது. நான் பிரதியுஷா என்ற தொண்டு அமைப்பை உருவாக்கி ஏழை குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகிறேன். கைத்தறி துணிகளை விளம்பரப்படுத்த தெலுங்கானா அரசின் தூதுவராகவும் இருக்கிறேன். தமிழகத்திலும் இதுபோன்ற பணிக்கு தூதுவராக இருக்க என்னை அணுகினால் ஏற்பேன்.

அரசியலுக்கு வந்துள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரில் யாருக்கு உங்கள் ஆதரவு என்று கேட்கப்படுகிறது. எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. மக்களுக்கு தெரியும். அவர்கள் சரியான முடிவு எடுத்து ஓட்டு போடுவார்கள்.

பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டுமன்றி எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமாவில் நேர்மையான மனிதர்கள் உள்ளனர். நல்ல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், உதவியாளர்கள் உள்ளனர். திரைக்கு பின்னாலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறார்கள்.

அதே நேரம் சில கறுப்பு ஆடுகளும் இருக்கலாம். அவர்களால் சில பெண்களுக்கு மோசமான அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கும். இதை தடுக்க தற்போது குழுக்கள் அமைத்து உள்ளனர். இனிமேல் அந்த தவறுகள் நடக்காது என்ற நம்பிக்கை உள்ளது. சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அனைத்து கற்பழிப்பு குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும்.”

இவ்வாறு சமந்தா கூறினார். 

Next Story