சாவித்திரி படம் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானை புகழ்ந்து தள்ளிய ராஜமவுலி


சாவித்திரி படம் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானை புகழ்ந்து தள்ளிய ராஜமவுலி
x
தினத்தந்தி 10 May 2018 9:51 AM GMT (Updated: 10 May 2018 9:51 AM GMT)

‘நடிகையர் திலகம்’ படத்தை பார்த்த பின்னர் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டி உள்ளார். #Mahanati #Rajamouli #KeerthySuresh #DulquerSalmaan


சென்னை,

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநாதி பெயர்களில் தயாராகி உள்ளது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்து உள்ளனர். சமந்தா, ஷாலினி பாண்டே, விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். ‘நடிகையர் திலகம்’ படத்தின் ‘டீசர்’ வெளியானதும் நடிகை கீர்த்தி சுரேஷை பலரும் பாராட்டினார்கள். சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தங்களுடைய பாராட்டு செய்திகளை பதிவிட்டார்கள்.

 படத்தில் முதல்கட்டமாக சாவித்திரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் விமர்சனங்களும் எழுந்தது, அவை அனைத்தையும்  ‘டீசர்’ வெளியாகி தவிடுபொடியாக்கியது.

தமிழில் ‘நடிகையர் திலகம்’ நாளை வெளியாகிறது, தெலுங்கில் மகாநாதி புதன் கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். பாகுபலியின் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் பிரதிபலிக்க செய்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியும் படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்து உள்ளார். படம் பார்த்துவிட்டு டுவிட்டரில் கருத்து பதிவிட்டு உள்ள ராஜமவுலி, “இதுவரையில் நான் பார்த்ததிலேயே, சாவித்திரி அம்மாவை அப்படியே பிரதிபலித்தது போன்று கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். இது சாதாரண இமிட்டேஷன் கிடையாது. 

கீர்த்தி மிகப்பெரிய நடிகையை நம் வாழ்க்கைக்கு திரும்ப அழைத்து வந்து உள்ளார். துல்கர் சல்மான் உண்மையிலேயே சிறப்பாக நடித்து உள்ளார். இப்போது நான் துல்கர் சல்மானுடைய ரசிகன் ஆகிவிட்டேன். நாக் அஸ்வின் மற்றும் ஸ்வப்னாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். உங்களுடைய நம்பிக்கை, உறுதி எல்லாமே குறிப்பிடத்தக்கது” என குறிப்பிட்டு உள்ளார். எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டுக்கு கருத்து பதிவு செய்து உள்ள கீர்த்தி சுரேஷ், “இப்போது வரையில் என்னுடைய கண்ணை என்னாலே நம்பமுடியவில்லை சார்!!! இது எனக்கு மிகப்பெரியது. மிக்க நன்றி சார்!!!,” என பதிவிட்டு உள்ளார். 


Next Story