கர்நாடக அரசியல் குறித்து பிரகாஷ்ராஜ் ஆதங்கம்


கர்நாடக அரசியல் குறித்து பிரகாஷ்ராஜ் ஆதங்கம்
x
தினத்தந்தி 17 May 2018 10:00 PM GMT (Updated: 17 May 2018 6:38 PM GMT)

கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க பெரும் முயற்சிகள் எடுத்து பிரசாரம் செய்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

பிரகாஷ்ராஜ் இதற்காக அவருக்கு வர வேண்டிய இந்தி பட வாய்ப்புகளை இழந்தார். ஏற்கனவே படங்களில் ஒப்பந்தம் செய்தவர்களும் கடைசி நேரத்தில் கழற்றி விட்டனர். தேர்தல் பிரசாரத்தில் பிரகாஷ்ராஜ் காரை மறித்து பா.ஜனதா கட்சியினர் ரகளை செய்த சம்பவங்களும் நடந்தன.

இதையெல்லாம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கண்டனங்களை பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் எதிர்பார்ப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன. அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற முறையில் பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. மெஜாரிட்டியை நிரூபிக்க அந்த கட்சிக்கு கவர்னர் அவகாசம் அளித்துள்ளார்.

இது பிரகாஷ்ராஜுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:–

‘‘கர்நாடகத்தில் அரசியலமைப்பு படுகொலை செய்யப்படுவது தொடங்கி விட்டது. மக்களுக்கு நேரும் அவலங்கள் இனிமேல் வெளியே வராது. ஆனாலும் எம்.எல்.ஏக்கள் எந்த பக்கம் தாவுகிறார்கள். எந்த சொகுசு விடுதிகளில் தங்குகிறார்கள் என்பதெல்லாம் பரபரப்பான செய்திகளாக வெளிவருவதை  பார்க்கலாம்.’’

இவ்வாறு பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story