“பாலியல் கொடுமைகளை எதிர்க்கும் கதையில் நடிக்கிறேன்” -நடிகர் விஷால்
விஷால் நடித்து தமிழில் வந்துள்ள ‘இரும்புத்திரை’ படத்தை ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர்.
விஷால் நடித்து தமிழில் வந்துள்ள ‘இரும்புத்திரை’ படத்தை ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். இதற்காக ஐதராபாத் சென்றுள்ள விஷால் அங்கு நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
“ஆதார் கார்டு, ஏ.டி.எம்., டிஜிட்டல்களில் நடக்கும் தவறுகளையும், தகவல்கள் திருடப்படுவதையும் மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். இயக்குனர் கதையை சொன்னதுமே இப்படியெல்லாம் குற்றங்கள் நடக்கிறதா? என்ற அதிர்ந்து பேஸ்புக் பக்கமே போகவில்லை.
விவசாயிகள் கடன் வாங்கினால் வீட்டுக்கு போய் அவமானப்படுத்துகின்றனர். ஆனால் கோடிகோடியாய் கடன் வாங்கிய விஜய் மல்லையா போன்றவர்களை விமானத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த கொடுமைகள் மாறவேண்டும். இரும்புத்திரை படத்துக்கு வரவேற்பு கிடைத்ததால் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டம் உள்ளது. அடுத்து தெலுங்கில் வெற்றி பெற்ற ‘டெம்பர்’ படத்தின் தமிழ் பதிப்பில் நடிக்கிறேன். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. இதில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதே சரியானது. இந்த பாலியல் கொடுமைகளை எதிர்க்கும் கதையம்சம் உள்ளதுதான் நான் அடுத்து நடிக்கப்போகும் படம். சமூகத்துக்காக குரல் கொடுப்பதை அரசியலுடன் இணைத்து பேசுகின்றனர்.
ஓட்டு போடும் சாதாரண குடிமகனாகவே கேள்விகள் கேட்கிறேன். தூத்துக்குடியில் 13 பேரை கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி தெரியவேண்டும். துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பதை பிரதமர் மோடியில் இருந்து தமிழக அரசுவரை மக்களுக்கு சொல்ல வேண்டும். உண்மைகளை பேச தைரியம் தேவை இல்லை. பொறுப்புணர்வு இருந்தால் போதும்.”
இவ்வாறு விஷால் கூறினார்.
Related Tags :
Next Story