எனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது - நடிகை ஸ்வரா பாஸ்கர்
எனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது என நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சினிமா வாய்ப்பு தர படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று தெலுங்கு, இந்தி நடிகைகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய அமைப்புகளும் முளைத்துள்ளன. இதனால் செக்ஸ் தொல்லைகள் கொடுக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அடங்கி இருப்பதாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் தனக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வருவதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவுகள் இருக்கின்றன. படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளை வைக்கிறார்கள். பெண்மையை கேவலப்படுத்தும் வசனங்களும் உள்ளன. இதை கடுமையாக நான் எதிர்த்து வருகிறேன். சமூக வலைத்தளத்திலும் கருத்து பதிவிடுகிறேன்.
இதனால் என்மீது பலர் ஆத்திரத்தில் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் மோசமாக திட்டுகிறார்கள். உன்னை கற்பழிக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் மிரட்டுகிறார்கள். மோசமான வலைத்தள கருத்து பதிவுகளை கட்டுப்படுத்த அமைப்புகள் உருவாக்க வேண்டியது அவசியம். ஆன்லைனில் குடும்பம், பெயர், பிறந்ததேதி சாதி, மதம் போன்ற சொந்த விவரங்களையும் திரட்டி பதிவு செய்து மிரட்டுகிறார்கள். இதனால் சுயகவுரவம் பாதிக்கிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்துவது இல்லை. புகார் அளிக்க சென்றால் உனக்கு ஏன் அவர்களுடன் வம்பு. ஒதுங்கிப்போ என்கிறார்கள். இதுபோன்ற ஆன்லைன் பாலியல் தொல்லைகள் தடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story