அறிமுக படத்தில் கமல் கேட்டதுபோல “யார் நீங்க” என்பது ரஜினிகாந்தின் அதிர்ஷ்ட வார்த்தையா?


அறிமுக படத்தில் கமல் கேட்டதுபோல “யார் நீங்க” என்பது ரஜினிகாந்தின் அதிர்ஷ்ட வார்த்தையா?
x
தினத்தந்தி 1 Jun 2018 11:30 PM GMT (Updated: 1 Jun 2018 7:27 PM GMT)

யார் நீங்க என்பது ரஜினிகாந்தின் அதிர்ஷ்ட வார்த்தையா என கருத்துகள் வெளியாகி உள்ளன.


யார் நீங்க..? நான்தான்பா ரஜினிகாந்த்...

இந்த வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் டிரென்டாகி தெறிக்க விட்டு வருகின்றன.

ரஜினிகாந்த் எங்கு சென்றாலும் பேசினாலும் அது பரபரப்பாகி விடுகிறது. அதுபோல்தான் தூத்துக்குடி பயணமும் அமைந்துவிட்டது. அங்கு காயம்பட்டவர்களை ரஜினிகாந்த் சந்தித்தபோது இந்த கேள்வியும் பதிலும் பிறந்தது.

இதைத்தொடர்ந்து “நான்தான்பா ரஜினிகாந்த்” என்ற கேஷ்டேக்குடன் எதிர்ப்பாளர்கள் கேலி செய்து கருத்துக்கள் பதிவிடுகிறார்கள். மீம்ஸ்களும் வெளிவந்துள்ளன.

‘நான்தான்பா ரஜினிகாந்த்... இருந்துட்டு போங்க’

‘இவ்வளவு வருஷம் இமயமலை போய் பாபாஜியை பார்த்து தவம் இருந்து ஆன்மிக அரசியலை முன்னெடுக்கிற இவராலாயே இரண்டு ரோஷமான கேள்விக்கு கோபத்தை அடக்க முடியவில்லை.’

‘வேங்கை மகனே ஒரே ஒருமுறை மட்டுமே ஒருவர் நீங்க யார் என்று கேட்டதற்கு இவ்வளவு கோபப்படுகிறீர்களே.”

மேற்கண்டவாறெல்லாம் பலரும் டுவிட்டரில் பேசி வருகிறார்கள்.

ஆனால் “யார் நீங்க” என்பது அதிர்ஷ்டவார்த்தை என்று ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். அதற்கான காரணத்தையும் சொல்கிறார்கள்.

ரஜினிகாந்த் 40 வருடங்களுக்கு முன்பு சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து அபூர்வ ராகங்கள் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிறிய வேடத்தில் அறிமுகமானார்.

அந்த காட்சியில் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வரும்போது அவரை பார்த்து கமல்ஹாசன் யார் நீங்க என்று கேட்பார்? அதற்கு ரஜினிகாந்த் ‘நான் பைரவி புருஷன்’ என்று பதில் சொல்வார்.

ரஜினிகாந்தை பார்த்து சினிமாவில் முதல் முதலாக கேட்கப்பட்ட “யார் நீங்க” என்ற வார்த்தைக்கு பிறகுதான் அவரது சினிமா வாழ்க்கை வளர்ச்சி கண்டது. சூப்பர் ஸ்டாராகவும் உயர்ந்தார்.

அதுபோல் தூத்துக்குடியில் ஒலித்த “யார் நீங்க” என்ற வார்த்தைக்கு பிறகு ரஜினிகாந்தின் அரசியல் வாழ்க்கை அமோகமாக இருக்கப்போகிறது என்று அவரது ரசிகர்கள் கருத்துகள் பதிவிட்டு சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறார்கள்.

Next Story