நடிகைகளால் பாலியல் தொல்லை: வில்லன் நடிகர் ரவிகிஷன் புகார்


நடிகைகளால் பாலியல் தொல்லை: வில்லன் நடிகர் ரவிகிஷன் புகார்
x
தினத்தந்தி 13 Jun 2018 10:30 PM GMT (Updated: 13 Jun 2018 6:54 PM GMT)

நடிகைகளால் பாலியல் தொல்லை நடப்பதாக வில்லன் நடிகர் ரவிகிஷன் புகார் தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக புகார்கள் குவிந்து வருகின்றன. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி போராட்டங்கள் நடத்தி இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இருக்கிறார். நடிகைகள் ராதிகா ஆப்தே, பார்வதி மேனன், ரெஜினா, அபூர்வா, சுனிதா ரெட்டி, சுருதி என்று பலர் பாலியல் தொல்லைகள் இருப்பதை வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் ரவிகிஷன் சில நடிகைகள், நடிகர்களுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுப்பதாக புதிய குற்றச்சாட்டை கிளப்பி இருக்கிறார்.

இவர் 30 வருடங்களாக படங்களில் நடிக்கிறார். அதிகமாக வில்லன் கதாபாத்திரங்களில் வருகிறார். விக்ரம் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ஸ்கெட்ச் படத்தில் வில்லனாக வந்தார். தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். ரவிகிஷன் அளித்த பேட்டி வருமாறு:-

“பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக பலரும் பேசுகின்றனர். ஆனால் இதே காரணத்துக்காக நடிகர்களையும் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. புதிதாக வாய்ப்பு கேட்டு வரும் நடிகர்கள் செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். இது பட உலகில் சகஜமாக நடந்து வருகிறது.

சில முன்னணி கதாநாயகிகள், நடிகர்களை கொடுமைப் படுத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. படுக்கைக்கு சென்று பட வாய்ப்பு பெற்றால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. உங்களை விற்று பெறும் வாய்ப்பினால் எதிர்காலத்தில் நிலைக்க முடியாது. படுக்கைக்கு சென்று வாய்ப்புகள் பெறும்போது முதலில் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் தன்னை விற்றுத்தான் இந்த நிலைமைக்கு வந்தோம் என்ற நினைப்பே உங்களை கொடுமைப்படுத்தும்.” இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்வீர்சிங் சினிமாவுக்கு வந்த நேரத்தில் தன்னை சிலர் படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார். நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் இதே தொல்லையில் சிக்கியதாக தெரிவித்து இருந்தார்.

Next Story