விஜய் சேதுபதி படப்பிடிப்பில் குளிர் தாங்காமல் மயங்கி விழுந்த நடிகை சாயிஷா


விஜய் சேதுபதி படப்பிடிப்பில் குளிர் தாங்காமல் மயங்கி விழுந்த நடிகை சாயிஷா
x
தினத்தந்தி 13 Jun 2018 11:00 PM GMT (Updated: 13 Jun 2018 7:18 PM GMT)

விஜய் சேதுபதி படப்பிடிப்பில் குளிர் தாங்காமல் நடிகை சாயிஷா மயங்கி விழுந்தார்.

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா ஜோடியாக நடித்துள்ள படம் ஜூங்கா. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் இயக்குனர் கோகுல் பேசியதாவது:-

“ஜூங்கா படப்பிடிப்பை குளிர்பிரதேசத்தில் நடத்தினோம். மைனஸ் 9 டிகிரியில் படப்பிடிப்பு நடந்தபோது சாயிஷா மெல்லிய உடை அணிந்து இருந்தார். அவரால் குளிரை தாங்க முடியவில்லை. மயக்கமானார். உடனே அவரை காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். எனக்கு படப்பிடிப்பு நின்று விட்டதே என்ற வருத்தம் ஏற்பட்டது.

கார் சிறிது தூரம் சென்றதும் நின்றது. பின்னர் அது திரும்பி படப்பிடிப்பு நடந்த இடத்துக்கே வந்தது. காரில் இருந்து மயக்கம் தெளிந்து இறங்கி வந்த சாயிஷா “என்னால் படப்பிடிப்பு பாதிக்க கூடாது இன்னும் 4 ஷாட்டுகள்தானே இருக்கிறது. சிறிது நேரம் ஹீட்டர் அருகில் நின்று நடித்து முடித்துவிட்டு கிளம்புகிறேன்” என்றார்.

அவரது அர்ப்பணிப்பை பார்த்து மகிழ்ந்தோம். இந்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. அதை விட மேலான நகைச்சுவை படமாக இருக்கும். காதல், அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

விஜய்சேதுபதி பேசும்போது, “கதை பிடித்ததால் இந்த படத்தில் நடித்தேன். அனைவரும் ரசிக்கும் படமாக ‘ஜுங்கா’ தயாராகி உள்ளது” என்றார்.

நடிகர் நாசர், டைரக்டர்கள் ஜனநாதன், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், ஆர்.பி.சவுத்ரி, கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story