திருநங்கைகள் பற்றி கிண்டல்: நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்


திருநங்கைகள் பற்றி கிண்டல்: நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 16 Jun 2018 10:48 PM GMT (Updated: 16 Jun 2018 10:48 PM GMT)

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஈடுபாடாக இருப்பவர். தமிழ்நாட்டில் நடக்கும் பல பிரச்சினைகள் குறித்து தன் கருத்தை பதிவிட்டு வருகிறார்.

அரசியல் பிரபலங்களையும் நடிகை கஸ்தூரி கிண்டல் செய்து வருகிறார். சமீபத்தில், 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு குறித்த கோர்ட்டு தீர்ப்பு வெளியானது.

அதுகுறித்து அவர், “18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா?ஆ ஆங்! என பதிவிட்டு, திருநங்கைகள் இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இது, திருநங்கைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது.

இதனால், அந்த பதிவை உடனே நீக்கிய கஸ்தூரி, மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர், “இது ஸ்டாண்டப் காமெடி போலதான்.

யாரையும் புண்படுத்தும் அறிக்கைகள் அல்ல. சிரிக்க மட்டுமே...என்று கூறியிருக்கிறார். இதுபற்றி ‘டுவிட்டரில்’ அவர் கூறியிருப்பதாவது:-

“கொஞ்சம் எல்லைகளை வளைக்கும் காமெடி அது. பொறுப்பற்ற காமெடிதான். அதுதான் அதன் சிறப்பே. இவ்வகை லொள்ளுகள் சிரிக்க மட்டுமே. அறிக்கைகள் அல்ல. ஸ்ரீதேவி-சன்னிலியோன் பற்றி நான் செய்த ‘கமெண்ட்’டும், இன்று நான் போட்ட கமெண்ட்டும் அவ்வகையை சேர்ந்தவை.

இதுபோன்ற குறும்பும், தெனாவட்டும் கலந்த கமெண்ட்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்தது அல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மனதின் ஆழத்தில் இருந்து மன்னிக்க வேண்டுகிறேன்.”

இவ்வாறு கஸ்தூரி கூறியிருக்கிறார். 

Next Story