நடிகர் சங்க உறுப்பினர் அட்டை கேட்டு நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் போராட்டம்


நடிகர் சங்க உறுப்பினர் அட்டை கேட்டு நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் போராட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2018 12:05 AM GMT (Updated: 20 Jun 2018 12:05 AM GMT)

நடிகர் சங்க உறுப்பினர் அட்டை கேட்டு நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார்.

தெலுங்கு பட உலகில் நடிக்க வரும் பெண்களை சிலர் படுக்கைக்கு அழைப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் விவரங்களையும் வெளியிட்டு அதிர வைத்தார். தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.

ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினரும் களம் இறங்கினர். அதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டி தெலுங்கு படங்களில் நடிக்க, தெலுங்கு நடிகர் சங்கம் தடை விதித்தது. மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதால், அவர் மீதான தடை நீக்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் நானி மீதும், ஸ்ரீரெட்டி ‘செக்ஸ்’ புகார் கூறினார். “நானி பெரிய கதாநாயகன் ஆவதற்கு முன்பே எனக்கு தெரியும். அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். நான் பெரிய படத்தில் நடிக்கும்போது, உனக்கு கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றார். உடல் ரீதியாக என்னை அவர் பயன்படுத்திக் கொண்டார். இப்படி ஆசை காட்டி, இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் நானி கெடுத்து விட்டார் என்றும் கூறினார்.

இதனால் ஸ்ரீரெட்டிக்கும், நானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. “ஸ்ரீரெட்டி புகாரில் உண்மை இல்லை என்றும் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும் ஸ்ரீரெட்டிக்கு நானி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

இந்த நிலையில், தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும் என்று கோரி, ஸ்ரீரெட்டி மீண்டும் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்.

இதுவரை அவருக்கு உறுப்பினர் அட்டை கொடுக்காமல், தெலுங்கு நடிகர் சங்கம் நிறுத்தி வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story