என்னை கொலை செய்ய சதி - நடிகர் பிரகாஷ்ராஜ்


என்னை கொலை செய்ய சதி - நடிகர் பிரகாஷ்ராஜ்
x
தினத்தந்தி 28 Jun 2018 10:30 PM GMT (Updated: 28 Jun 2018 6:40 PM GMT)

பிரபல எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த சம்பவத்துக்கு பிறகு  பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்துத்துவா அமைப்புகளையும் கண்டித்து பேசினார்.  தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வந்தார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். இதனால் அவரது காரை மறித்து போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு டைரியையும் கைப்பற்றினார்கள். அந்த டைரியில் அடுத்து அவர்கள் கொலை செய்ய திட்டமிட்டுள்ளவர்களின் பெயர் விவரம் இருந்தது. கொலை பட்டியலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், கிரிஷ் கர்நாட் மற்றும் எழுத்தாளர்கள் பெயர்கள் இருந்தன. இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

‘‘பெங்களூருவில் எழுத்தாளர் கவுரி லங்கேஷை கொலை செய்தவர்கள் நடிகர் பிரகாஷ்ராஜையும் கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு கூறியுள்ளது. எனது குரலை ஒடுக்குவதற்கான மிரட்டல்தான் இது. இதுபோன்ற மிரட்டல்கள் வரும்போது எனது குரல் மேலும் வலிமையாக ஒலிக்கும். கோழைகளே இந்த வெறுப்பு அரசியலை விட்டு வெளியே வருவது குறித்து சிந்தியுங்கள்.’’

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

கொலை மிரட்டலை தொடர்ந்து பிரகாஷ்ராஜுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story