நடிகைக்கு பாலியல் தொல்லை மிதுன் சக்கரவர்த்தி மகன் மீது வழக்கு


நடிகைக்கு பாலியல் தொல்லை மிதுன் சக்கரவர்த்தி மகன் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 July 2018 10:57 PM GMT (Updated: 3 July 2018 10:57 PM GMT)

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆதி கதாநாயகனாக நடித்த யாகவாராயினும் நாகாக்க படத்தில் வில்லனாக நடித்தார். இவரது மகன் மஹா அக்‌ஷய். இவரும் இந்தி படங்களில் நடிக்கிறார். இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்து வரும் இளம் நடிகை ஒருவருடன் மஹா அக்‌ஷய் நெருங்கி பழகினார்.

இருவரும் காதலிப்பதாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில் மஹா அக்‌ஷய் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நடிகை டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

“என்னுடன் மஹா அக்‌ஷய் சில வருடங்களாக நெருங்கி பழகி வந்தார். என்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். 4 வருடங்களாக என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை.

மருந்து கொடுத்து எனது கர்ப்பத்தை கலைத்து விட்டார். மஹா அக்‌ஷய்யின் தாயார் யோகிதா பாலிக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர் என்மீது ஆத்திரப்பட்டார். மகனுடனான உறவை முறித்து விடும்படி மிரட்டினார். என்னை பாலியல் வன்கொடுமை செய்த மஹா அக்‌ஷய் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.”

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை மாஜிஸ்திரேட் ஏக்தா கவுபா விசாரணை நடத்தி நடிகர் மஹா அக்‌ஷய் மற்றும் அவரது தாயார் யோகிதா பாலி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story