சாமி-2 படத்தில் நடிக்க மறுத்த திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ்


சாமி-2 படத்தில் நடிக்க மறுத்த திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ்
x
தினத்தந்தி 3 July 2018 11:11 PM GMT (Updated: 3 July 2018 11:11 PM GMT)

சாமி-2 படத்தில் திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேசை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விக்ரம்-திரிஷா ஜோடியாக நடித்து 2003-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘சாமி’. ஹரி இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேசை தேர்வு செய்தனர். திரிஷாவையும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தனர்.

படப்பிடிப்பு தொடங்கியதும் திரிஷா திடீரென்று படத்தில் நடிக்க மறுத்து விலகினார். தனது கதாபாத்திரம் வலுவில்லாமல் உள்ளது என்றும் சிறிது நேரமே தனது காட்சிகளை படத்தில் வைத்துள்ளனர் என்றும் அவர் குறை கூறியதாக தெரிகிறது. இதனாலேயே அதில் நடிக்க மறுத்ததாக கூறப்பட்டது. திரிஷா மீது சாமி-2 படத்தை தயாரிக்கும் சிபு தமீம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

சமரச முயற்சிகளை திரிஷா ஏற்காமல் நடிக்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். சம்பள அட்வான்சையும் திருப்பி கொடுத்து விட்டார். இதனால் படக்குழுவினர் வேறுவழியின்றி இப்போது திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேசை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் ரமேஷ் கண்ணா, கோட்டா சீனிவாசராவ், டெல்லி கணேஷ், சுமித்ரா ஆகியோரும் நடிக்கின்றனர்.

சாமி-2 படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தமான காட்சிகளும் பாடல் காட்சியும் படமாகி வருகிறது. இந்த படம் குறித்து இயக்குனர் ஹரி கூறும்போது, “சாமி படம் முதல் பாகத்தின் இறுதி காட்சியில் “சாமி வேட்டை தொடரும்” என்று முடித்து இருந்தோம். அந்த வேட்டை இரண்டாம் பாகத்தில் தொடர்கிறது” என்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது, “திரிஷா மறுத்ததால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மணிரத்னம், வெற்றிமாறன், கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து விட்டேன். ஹரி திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்துவார். அவர் இயக்கத்தில் விக்ரமுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்” என்றார். 

Next Story