வெளிநாட்டவரை மணக்க மாட்டேன் –நடிகை கங்கனா ரணாவத்


வெளிநாட்டவரை மணக்க மாட்டேன் –நடிகை கங்கனா ரணாவத்
x
தினத்தந்தி 5 July 2018 11:00 PM GMT (Updated: 5 July 2018 7:11 PM GMT)

நான் வெளிநாட்டினரை மணக்க மாட்டேன் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

ஜெயம் ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் நடித்த ‘குயின்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் குயின் படத்தை தயாரிக்கிறார்கள். 

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷனுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டு இந்தி பட உலகை பரபரப்பாக்கவும் செய்தது. இப்போது மணிகர்னிகா, மென்டல் ஹே ஹயா ஆகிய இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. மணிகர்னிகா சரித்திர படம். ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது. கங்கனா ரணாவத்துக்கு 31 வயது ஆகிறது. திருமணம் எப்போது? என்று கேட்டபோது அவர் கூறியதாவது:–

‘‘நான் விரைவில் திருமணம் செய்துகொள்வேன். எனக்கு கணவராக வருகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்று மனதில் கற்பனை செய்து வைத்து இருக்கிறேன். கணவராகப் போகிறவருக்கு நன்றாக சமைக்க தெரிய வேண்டும். மற்றவர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். 

நான் வெளிநாட்டினரை மணக்க மாட்டேன். எனக்கு தேசபக்தி அதிகம். எனவே எனக்கு கணவராக வருகிறவர் இந்தியராக இருக்க வேண்டும். அவருக்கு நாட்டுப்பற்று இருக்க வேண்டும். திருமண ஏற்பாட்டுக்கு பிறகு தேசபற்று இல்லை என்று தெரியவந்தால் அவருடனான உறவையே முறித்து விடுவேன்.’’

இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.

Next Story