திலீப் விவகாரத்தில் மோதல் மலையாள நடிகர் சங்கம் உடைகிறது


திலீப் விவகாரத்தில் மோதல் மலையாள நடிகர் சங்கம் உடைகிறது
x
தினத்தந்தி 6 July 2018 12:30 AM GMT (Updated: 5 July 2018 7:36 PM GMT)

திலீப் விவகாரத்தால் மலையாள நடிகர் சங்கத்தில் தற்போது மோதல் முற்றியுள்ளது.

மலையாள நடிகர் சங்கத்துக்கு புதிய தலைவராக மோகன்லால் பொறுப்பு ஏற்றதும் முதல் வேலையாக நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் நீக்கி வைக்கப்பட்டு இருந்த திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார். இது மலையாள பட உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. திலீப் சேர்க்கப்பட்டதை கண்டித்து முன்னணி கதாநாயகிகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் மற்றும் கடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகை ஆகிய 4 பேரும் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள். 

மேலும் 14 நடிகைகள் நடிகர் சங்க முடிவை கண்டித்தனர். குற்றவாளிக்கு நடிகர் சங்கம் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். கேரள மகளிர் ஆணையமும் மோகன்லால் முடிவை விமர்சித்தது. பொதுக்குழுவில் ஒருமனதாக தீலிப்பை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டதாக மோகன்லால் விளக்கம் அளித்தார். 

திலீப் விவகாரத்தால் மலையாள நடிகர் சங்கத்தில் தற்போது மோதல் முற்றியுள்ளது. எதிர்ப்பாளர்கள் இணைந்து புதிய சங்கத்தை தொடங்க முடிவு எடுத்துள்ளனர். நடிகரும், இயக்குனருமான ஆஷி அபு, ராஜீவ் ரவி ஆகியோர் இந்த போட்டி சங்கத்துக்கு தலைமை வகிக்கின்றனர். திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் சினிமா பெண்கள் கூட்டுக்குழு இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.

திலீப்பை சேர்த்ததை எதிர்க்கும் மேலும் 100 நடிகர்–நடிகைகளும் புதிய சங்கத்தில் இணைய முன்வந்துள்ளனர். மேலும் கடந்த காலங்களில் மலையாள நடிகர் சங்கத்தால் நடவடிக்கைகளுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட நடிகர்–நடிகைகளும் போட்டி சங்கத்தில் சேருகிறார்கள். நடிகர் ஆஷி அபு தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் திருவனந்தபுரம் திரும்பியதும் புதிய சங்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் மூத்த நடிகர் ஒருவர் கூறினார். 

கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனையும், போட்டி சங்கத்தை உருவாக்கும் நடிகர்–நடிகைகள் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளனர்.

Next Story