இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்
விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் படங்கள் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளன. அடுத்தடுத்து இவை திரைக்கு வருகின்றன.
விஜய் படத்துக்கு ‘சர்கார்’ என்று பெயர் வைத்து ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் அவரது தோற்றத்தையும் வெளியிட்டுள்ளனர்.
பொது சுகாதார துறை நோட்டீஸ் அனுப்பியதால் புகைப்பிடிக்கும் போஸ்டரை பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டனர். இதில் விஜய் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமெரிக்காவில் தொழில் நுட்ப வல்லுனராக இருந்து சென்னை திரும்பும் அவர் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடுவதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாகவும் தகவல்.
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையிலும் வெளிநாடுகளிலும் நடந்துள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பை முடித்து டப்பிங், இசைகோர்ப்பு பணிகளை தொடங்குகின்றனர். தீபாவளிக்கு சர்கார் திரைக்கு வருகிறது.
அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. ஐதராபாத்தில் அரங்கு அமைத்து பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துகின்றனர். சிவா டைரக்டு செய்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாக பேச்சு உள்ளது.
மதுரையில் நடக்கும் கதை. பிளாஷ்பேக்கில் ஒரு அஜித்குமார் வட சென்னை தாதாவாக வருகிறார். குடும்ப படமாக எடுக்கின்றனர். அடுத்த மாதம் இறுதிக்குள் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிடும் முடிவில் இருக்கிறார்கள். தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்த்து இப்போது பொங்கலுக்கு தள்ளிப்போகிறது.
சூர்யா படத்தை செல்வராகவன் இயக்குகிறார். என்.ஜி.கே என்று பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. நாயகிகளாக ரகுல்பிரீத்சிங், சாய்பல்லவி நடித்துள்ளனர். தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
விக்ரமின் சாமி–2 படப்பிடிப்பும் இறுதிகட்டத்தில் உள்ளது. நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் இந்த படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story