விஸ்வரூபம் 2: காதல், ஆக்சன் என உணர்ச்சி மிக்க காட்சிகள அதிகம் இருக்கும்-நடிகை பூஜா குமார்
விஸ்வரூபம் 2 படத்தில் காதல், ஆக்சன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவை அதிகம் இருக்கும் என நடிகை பூஜா குமார் கூறியுள்ளார்.
மும்பை,
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 படம் உருவாகி உள்ளது. இதில், விஸ்வரூபம் படத்தில் நடித்த நடிகைகள் பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், இந்தி ஆகிய 2 மொழிகளில் படம் வெளியாகிறது. தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இந்த படம் வருகிற ஆகஸ்டு 10ந்தேதி வெளியாகிறது.
இந்திய அமெரிக்க நடிகையான நடிகை பூஜா குமார் படத்தில் நடித்தது பற்றி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-ட்
ஒரு இரண்டு மணிநேர படத்திற்கு 4 வருடங்களை நாங்கள் செலவழித்து உள்ளோம். அதனால் படம் தடை செய்யப்படுவதற்கோ அல்லது சர்ச்சையில் சிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. பொதுமக்கள் படத்தினை காண செல்வதற்கான ஓர் ஊக்கத்தினை ஏற்படுத்துவது என் பணி.
சர்ச்சை, படம் வெளியாவதில் காலதாமதம் ஆகியவை பற்றி தயாரிப்பாளர்களுக்கே தெரியும். அவர் (கமல்ஹாசன்) திரைப்படங்களுக்கு நிறைய செய்திருக்கிறார்.
அதனால் நாம் அவருக்கு ஆதரவு தெரிவித்து, ஊக்கப்படுத்த வேண்டும். அவர் இந்திய திரைப்படங்களை மாற்றியுள்ளார். தொழில் நுட்ப மாற்றங்களை கொண்டு வந்தவர் என கூறியுள்ளார்.
இவர் தமிழ், இந்தி தவிர்த்து மேன் ஆன் எ லெட்ஜ் மற்றும் பிரால் இன் செல் பிளாக் 99 ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறும்பொழுது, ஹாலிவுட் படங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தெற்காசிய நடிகைகளுக்கு பெரிய வேடங்கள் இல்லை.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் தெற்காசிய நடிகைகள் சக்தி வாய்ந்தவர்களாக ஹாலிவுட்டில் உள்ளனர். பெண்கள் இன்று நிஜ வாழ்க்கையில் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர். திரைப்பட துறையிலும், வழக்கறிஞர்கள், எப்.பி.ஐ. ஏஜெண்டுகள் போன்ற வேடங்களில் நடித்து வருகின்றோம். தெற்காசிய பெண்களுக்கு இது ஒரு சிறந்த நேரம் என தெரிவித்துள்ளார்.