நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு “ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”


நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு “ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”
x
தினத்தந்தி 22 July 2018 10:53 PM GMT (Updated: 22 July 2018 10:53 PM GMT)

தமிழ், தெலுங்கு திரையுலகினர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் கூறிவரும் நடிகை ஸ்ரீரெட்டிக்கு பதில் அளித்து நடிகை கஸ்தூரி பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது.

“ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன். சினிமா ஆசைகாட்டி, தங்கள் ஈன புத்திக்குப் பெண்களை இரையாக்கிக் கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். சிலர் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது. அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன.

குறுக்கு வழி, ஏமாற்றம் நிறைந்தது. அதில் பலமுறை பயணித்திருக்கிறார் இவர். ஒருமுறைகூட அந்த வழி பயன்தரவில்லை. அப்புறமும் தன் அணுகுமுறை தவறு என்று ஏன் இந்தப் பெண் உணரவில்லை? சமரசங்கள் செய்தாலாவது வாய்ப்பு கிட்டாதா என்று அந்தப் பெண் யோசித்ததாகவே தெரிகிறது.

சினிமாவில் உள்ள ஆண்களைத் தவறாக எடைபோட்டு, ஏமாந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இல்லை, அவர் தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான். எல்லா நடிகைகளும் இயக்குநர்கள், நடிகர்களுக்கு இணங்கித்தான் சினிமாவில் முன்னேறியுள்ளார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்.

இணங்கினால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நினைத்தது மிகப்பெரிய முட்டாள்தனம் மட்டுமல்ல, திறமையையும், உழைப்பையும், ஒழுக்கத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறிய என்னைப் போன்ற நடிகைகளுக்கு எவ்வளவு அவதூறு... சினிமாவில் நிறைய நல்லவர்கள் உள்ளார்கள். அவர்கள் யாரையும் இப்பெண் சந்திக்கவேயில்லையா?

உங்க கூட நடிக்கனும் சார். அதுக்கு நான் என்ன வேணா பண்ணத் தயாரா இருக்கேன் சார். என்று வாய்ப்பு கேட்டு வந்த ஒரு பெண்ணை ஒரு நடிகர் கடுமையான தொணியில் புத்தி சொல்லி அனுப்பியதை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.

சினிமாவில் எல்லோருமே ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லை. ஏமாற்றுபவர்கள் கூட எல்லோரிடமும் வம்புக்குப் போக மாட்டார்கள். நாம் நடந்துகொள்ளும் முறையை வைத்துத்தான் நம்மிடம் எதிராளி நடந்துகொள்வார்”. இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

Next Story