‘‘அரசு விருது விழாவுக்கு அழைப்பு வரவில்லை’’ நடிகைகள் எதிர்ப்புக்கு மோகன்லால் விளக்கம்


‘‘அரசு விருது விழாவுக்கு அழைப்பு வரவில்லை’’ நடிகைகள்  எதிர்ப்புக்கு  மோகன்லால் விளக்கம்
x
தினத்தந்தி 25 July 2018 10:45 PM GMT (Updated: 25 July 2018 8:33 PM GMT)

கேரள மாநில அரசு சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

முதல்–மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு நடிகர்–நடிகைகளுக்கு விருதுகள் வழங்குகிறார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நடிகர் மோகன்லாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

இதற்கு நடிகர்–நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்த்ததற்காக மோகன்லாலை நடிகைகள் கண்டித்தனர். ரம்யா நம்பீசன், கீத்து மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்கள்.

எனவேதான் திரைப்பட விருது விழாவுக்கு மோகன்லாலை அழைக்க எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட துறையை சேர்ந்த 105 பேர் கையெழுத்திட்டு பினராயி விஜயனுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இந்த கடிதத்தில் நடிகர் பிரகாஷ்ராஜும் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அவர் மறுத்தார். ‘‘மோகன்லாலை அரசு விழாவுக்கு அழைக்க கூடாது என்று வற்புறுத்தி எழுதப்பட்ட  கடிதத்தில் நான் கையெழுத்திடவில்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.

மோகன்லாலிடம் இந்த சர்ச்சை குறித்து கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:–

‘‘நான் அரசுக்கு மரியாதை கொடுப்பவன். நிறைய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறேன். திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி இதுவரை அரசிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுப்பேன்.’’

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story