திருப்பதி கோவிலில் சமந்தா வழிபாடு
சமந்தாவுக்கு மெர்சல், இரும்புத்திரை ஆகிய இரண்டு படங்களின் வெற்றி மகிழ்ச்சியை கொடுத்தது.
சமந்தாவுக்கு மெர்சல், இரும்புத்திரை ஆகிய இரண்டு படங்களின் வெற்றி மகிழ்ச்சியை கொடுத்தது. தெலுங்கில் கிராமத்து பெண்ணாக நடித்து இருந்த ரங்கஸ்தலம் படமும் பெயர் வாங்கி கொடுத்தது. இப்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘யூடர்ன்’ படத்தில் நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் இது தயாராகிறது.
சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய்சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படங்களிலும் நடிக்கிறார். தற்போது தென்கொரியாவில் பெரிய வெற்றி பெற்ற மிஸ் கிரேனி என்ற படத்தின் ரீமேக்கில் 70 வயது மூதாட்டியாக நடிக்க சம்மதித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் சமந்தா திடீரென்று திருப்பதி கோவிலுக்கு சென்றார்.
முக்கிய பிரமுகர்களுக்கான வழியில் சென்று சாமி கும்பிட்டார். சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. பின்னர் சமந்தா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘எனக்கு மிகவும் பிடித்தமான இடம் திருப்பதி. இங்கு பல தடவை வந்து இருக்கிறேன். திருப்பதிக்கு வரும்போதெல்லாம் மகிழ்ச்சியும் மன அமைதியும் கிடைக்கிறது’’ என்றார்.
சமந்தாவை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்தார்கள். செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி சமந்தாவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story