தீபிகா படுகோனேவுக்கு இத்தாலியில் திருமணம் 30 பேருக்கு மட்டுமே அழைப்பு


தீபிகா படுகோனேவுக்கு  இத்தாலியில்  திருமணம் 30 பேருக்கு மட்டுமே அழைப்பு
x
தினத்தந்தி 14 Aug 2018 12:23 PM GMT (Updated: 14 Aug 2018 12:23 PM GMT)

தீபிகா படுகோனேவுக்கு இத்தாலியில் திருமணம் நடக்கிறது 30 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.




மும்பை


‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சர்ச்சையை ஏற்படுத்திய ‘பத்மாவத்’ படத்தில் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானார். இந்த படத்தில் நடித்ததற்காக எதிர்ப்புகளையும் கொலை மிரட்டல்களையும் சந்தித்தார்.

இதே படத்தில் வில்லனாக வந்த ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேயேயும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் அடிக்கடி வெளிவந்தன. இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் திருமண ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

நவம்பர் 20ந் தேதி இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக இருவருக்கும் நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டு உள்ளனர். இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். 

மொத்தம் 30 பேரை மட்டுமே அழைத்து செல்கிறார்கள். குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். திருமணம் முடிந்து இந்தியா திரும்பிய பிறகு நடிகர்-நடிகைகளை அழைத்து மும்பையில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இத்தாலியில் தான் திருமணம் நடந்தது. இத்தாலி அரசும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்து உள்ளது. 

Next Story