வெள்ளத்தில் மக்கள் தவிக்கும்போது பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் மம்முட்டிக்கு எதிர்ப்பு


வெள்ளத்தில் மக்கள் தவிக்கும்போது பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் மம்முட்டிக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 Aug 2018 11:45 PM GMT (Updated: 15 Aug 2018 5:51 PM GMT)

நடிகர் மம்முட்டி ‘குட்ட நாடன் பிளாக்’ என்ற படத்தின் டிரெய்லரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கன மழை பெய்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊருக்குள் ஆற்று வெள்ளம் புகுந்ததால் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. நிலச்சரிவுகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. அங்குள்ள மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து பெரும் கவலையில் இருக்கிறார்கள். 

இந்த சோகத்துக்கு மத்தியில் நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்து வரும் தன்னுடையை ‘குட்ட நாடன் பிளாக்’ என்ற படத்தின் டிரெய்லரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துவரும் இந்த இக்கட்டான நேரத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிடலாமா? என்று மம்முட்டியை கண்டித்து கேரள ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். 

அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்களும் மம்முட்டி செயலை விமர்சித்து உள்ளனர். கேரள வெள்ள சேதத்துக்கு நடிகர்–நடிகைகள் பலர் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள். சூர்யாவும் கார்த்தியும் இணைந்து ரூ.25 லட்சம் வழங்கி உள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்.

மம்முட்டியும் மோகன்லாலும் தலா ரூ.25 லட்சம் வழங்கி உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம் முதல் தவணையாக ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்து உள்ளது. நடிகை ரோகிணி ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார்.

Next Story