இன அங்கீகாரத்திற்கான போராட்டம் ‘42’


இன அங்கீகாரத்திற்கான போராட்டம் ‘42’
x
தினத்தந்தி 18 Aug 2018 11:12 AM GMT (Updated: 18 Aug 2018 11:12 AM GMT)

கிரிக்கெட், கால்பந்து, பேஸ்பால், கபடி, ஆக்கி என உலகம் முழுக்க விளையாடப்படும் குழு விளையாட்டுகளுக்கு தனித்தனியாக தோற்றம், வரலாறு என்றெல்லாம் உண்டு.

 எல்லா நாடுகளிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது தான். ஆனால் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் குழு என ஒன்று உண்டு இல்லையா? அதன் செயல் பாடுகள் என்ன? ஒரு அணியில் எந்த அடிப்படையில் ஒரு வீரர் சேர்க்கப்படு கிறார்? திறமை தான் உண்மையில் அளவீடாக பார்க்கப்படுகிறதா? என்ற கேள்விகளுக்கு, பொதுவான பதில் ‘இல்லை’ என்பது தான்.

மனிதனை மனிதன் விலை பேசி விற்ற காலமெல்லாம் மலை ஏறி விட்டதாக நாம் நினைக்கலாம். அது சரிதான்... மறைமுகமாக விலைபேசி விற்ற காலம் மலை ஏறி விட்டது. ஆனால் இன்றும் மனிதர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். அதன் மூலம் அவர்கள் பகிரங்கமாக விற்கப்படு கிறார்கள் என்பதே கசப்பான உண்மை.

‘ஒரு கிரிக்கெட் வீரரை, இந்த நிறு வனமோ.. இந்த நடிகரோ.. இந்த விலைக்கு ஏலமெடுத்தார். இந்த வீரர் இத்தனை கோடிக்கு விலைபோனார்’ என்பதெல்லாம் வெறும் செய்தியாக கடந்து போக வேண்டிய விஷயம் அல்ல. இது விளையாட்டு என்ற பெயரில் நடக்கும் மனித வியாபாரம்.

இரண்டு எதிரி நாடுகள் மைதானத்தில் மோதிக் கொள்வதை, விளையாட்டாக அல்லாமல் யுத்தம் போல சித்தரிப்பதன் மூலம் ஆதாயம் பெறுவது, பன்னாட்டு நிறுவனங்களும்.. சூதாட்டத் தரகர்களும் தான் என்ற மறு பக்கத்து உண்மையையும் நாம் உணர வேண்டியது அவசியம்.

நாம் இன்று இங்கே பார்க்கப்போவதும் விளையாட்டு சம்பந்தப்பட்ட சினிமாவைத் தான். பேஸ்பால் விளையாட்டை மையப்படுத்தி 2013-ம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் பெயர் ‘42’.

1947-ல் அமெரிக்கர்களின் பிரியமான விளையாட்டான பேஸ்பால் ஆட்டத்தில், கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட சேர்க்கப்பட்டிருக்கவில்லை.  ‘ப்ரூக்லின் டூக்கர்ஸ்’ என்ற பேஸ்பால் விளையாட்டு அமைப்பை, ‘ரிக்கி’ என்ற முதியவர் நிர்வகித்து வருகிறார். அவர் ஒரு முன்னாள் பேஸ்பால் வீரர். அவர் இந்த விளையாட்டை சிலவேறு கோணங்களில் பார்க்கிறார். ஒன்று.. இதில் நிறவெறி கூடாது. மற்றொன்று இது அவரது பிரதான வணிகம்.

ஒரு காட்சியில் ‘டாலர்கள் கருப்பும் இல்லை.. சிவப்பும் இல்லை.. அது பச்சை நிறம். எனக்கு அதுதான் பிடிக்கும்’ என பணத்தின் மீதான தனது பார்வையை பேசுகிறார்.

ஜாக்கி ராபின்சன் என்ற கருப்பினத்தைச் சேர்ந்த நீக்ரோ இளைஞனை, ரிக்கி தனது பேஸ்பால் குழுவில் விளையாட ஒப்பந்தம் போடு கிறார். அதுவரை வெள்ளையர்கள் மட்டுமே விளையாடி வந்த இந்த விளையாட்டில், புதிதாக ஒரு கருப்பின இளைஞன் சேர்க்கப்பட்டால், சந்திக்க வேண்டிய விளைவுகளை அவர் நன்கு அறிவார். ஆனாலும் இதை செய்வதால் பெறப்படும் கவன ஈர்ப்பையும், வணிகத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கிறார்.

‘ப்ரூக்லின் டூக்கர்ஸ்’ பேஸ்பால் குழுவில் இணைந்து விளையாட, ஜாக்கி ராபின்சனுக்கு பெரும் தொகை ஊதியமாக பேசப்படுகிறது. ராபின்சனை பொறுத்தவரை, இது அவனுக்கும்.. அவனது இனத்தை பெருமைப்படுத்துவதற்கும் கிடைத்த அரிய வாய்ப்பு. இதை அவன் சரியாக பயன்படுத்திக் கொண்டால், ஒரு இனத்தின் இருள் பயணத்திற்கு முகப்பு விளக்காக அவனது வெற்றி அமையும். இவற்றையெல்லாம் கருதியே ஜாக்கி ராபின்சன், துணிச்சலாக பேஸ்பால் விளையாட ஒப்புக் கொள்கிறான்.

அவனுடைய சக வீரர்கள், அவனை சற்றும் மதிப்பதில்லை. அவர்களோடு இணைந்து உணவோ, தங்கும் இடமோ கூட அவனால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. மைதானத்தில் விளையாடும் போது எதிர் அணியினரால் ‘ஏய் நீக்ரோ.. ஏய் நீக்ரோ..’ என பகிரங்கமாகவே அவன் சீண்டப்படுகிறான்.

ஆனால் அவனது இலக்கு.. தன்னை சீண்டுபவர்களுக்கு தற்காலிகமாக பதில் சொல்வது அல்ல. ஒடுக்கப்பட்ட தங்கள் கருப்பின மக்களுக்கு, நிரந்தர வெற்றி வாசலை திறக்கும் சாவி அவனிடம் உள்ளது. அந்த பெரும் பொறுப்பு, அவனை பொறுமையாக இருக்கச் செய்கிறது. என்றாலும் அவனும் மனிதன் தானே..? தொடர் நிராகரிப்புகளால் சில வேளைகளில் உடைந்து போகிறான். உணர்ச்சிவசப்பட்டு அழுகிறான். அந்த வேளைகளில் அவனது மக்கள்.. அவனது மனைவி எல்லோரும் அவனுக்கு உற்சாகம் கொடுக்கிறார்கள்.

மைதானத்தில் அவன் எவ்வளவு பெரிய சாகசம் செய்தாலும் கூட, வெள்ளையர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தாமல் மவுனமாக இருக்கிறார்கள். அவனும் எதையும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. அவன் உழைப்பது அவனது திறமைக்கு கிடைக்கப் போகும் புகழுக்காகவோ, அங்கீகாரத்துக்காகவோ இல்லை. பேஸ்பால் விளையாட்டில் கருப்பினத்தவர்களுக்கும் ஒரு இடம் வேண்டும்.. அந்த ஒன்றுக்காகத் தான். அது தான் அவனை உந்தித் தள்ளியது. அது விளையாட்டு மைதானம் அல்ல.. அவனுக்கான யுத்த களம். அந்த வெறி அவனது ஆட்டத்தில் வெளிப்படுகிறது. பல இன்னல்களுக்கு பிறகு அவன் தான் நினைத்ததை சாதித்தும் காட்டிவிடுகிறான்.

உண்மைக் கதையைக் கொண்டு உருவான இந்தத் திரைப் படத்தின் இயக்குனர், பிரையின் ஹெல்ஜிலாண்ட். இவர் இப்படத்தின் வாயிலாக, ஜாக்கி ராபின்சன் வாழ்க்கையின் சில பகுதிகளை படமாக்கியிருந்தார். அதனால்தான் ஜாக்கி ராபின்சன் அணிந்து விளையாடிய சீருடை எண் ‘42’ என்ற பெயரிலேயே வெளியிட்டார்.

2013-ம் வருடம் வெளியான இத்திரைப்படம், ஆப்பிரிக்கன்-அமெரிக்கன் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதை வென்றது. மேலும் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான, ஹோச்சி பிலிம் விருது-2013, கீ ஆர்ட்ஸ் வழங்கும் சிறந்த ஒலி, ஒளி தொழில்நுட்பத்திற்கான விருது என பல விருதுகளை குவித்தது.

-தொடரும்.

நிஜ நாயகன்

இந்தத் திரைப்படம் ஒரு உண்மைக் கதை என்பதால், நிஜ நாயகன் ஜாக்கி ராபின்சன் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். 1919-ல் ஜோர்ஜியாவில் பிறந்த இவர், சிறு வயதிலேயே தன் தந்தையால் கலிபோர்னியா அழைத்து வரப்பட்டு அங்கேயே வளர்ந்தார். ‘மேஜர் லீக்’ என்ற பேஸ்பால் சங்கத்தில் சேர்ந்து விளையாடிய முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் இவர்.

1947-ல் தனது விளையாட்டு வாழ்வை தொடங்கிய ஜாக்கி ராபின்சன், தொடர்ந்து 10 ஆண்டுகள் அந்தத் துறையில் கோலோச்சினார். அதுவரை பேஸ்பால் ஆட்டத்தில் இருந்த நிறவெறி தழும்புகளை, தனது வியர்வையால் அழித்தார். அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர், தனது 53-வது வயதில் நீரிழிவு நோயால் காலமானார்.

அமெரிக்க பேஸ்பால் விளையாட்டில், கருப்பின மக்களுக்கான முதல் வெற்றிப் பந்தை உயரே அடித்த ஜாக்கி ராபின்சன் அணிந்து விளையாடிய சீருடை எண் ‘42’. இதனை இன்றும் அமெரிக்க பேஸ்பால் வீரர்கள் வருடத்திற்கு ஒரு முறை அவர் நினைவாக அணிவார்கள். அது தான் ஒரு இனத்தின் வழிகாட்டிக்கான வெற்றி. நீக்ரோ லீக்ஸ், மைனர் லீக்ஸ், மேஜர் லீக்ஸ் என படிப்படியாக உயரம் தொட்டவர் ஜாக்கி ராபின்சன். அமெரிக்காவில் அவருக்கு நினைவிடங்கள், அவர் பெயரால் விளையாட்டு கழகங்கள் எல்லாம் உண்டு. 

Next Story