மெரினா அரசியலை சாடிய கஸ்தூரி


மெரினா அரசியலை சாடிய கஸ்தூரி
x
தினத்தந்தி 19 Aug 2018 11:39 PM GMT (Updated: 19 Aug 2018 11:39 PM GMT)

நடிகை கஸ்தூரி அரசியல் சமூக விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் துணிச்சலாக பேசி வருகிறார். இதனால் அவருக்கு எதிராக விமர்சனங்களும் வருகின்றன.

அதை பற்றி கவலைப்படாமல் தொடந்து கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் சாமி சிலைகள் கடத்தல் குறித்து பேசினார். சினிமாவில் பலர் சம்பளம் தராமல் ஏமாற்றியதாகவும் கூறினார். இப்போது மெரினா அரசியலை கடுமையாக சாடி இருக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகிலேயே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்குள்ள அண்ணா நினைவிடத்தின் பின்னால் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உடல் அடக்கம் நடந்துள்ளது.

மெரினாவில் சில தலைவர்கள் தியானம் செய்கிறார்கள். அரசியல் அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்கள். இதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“கலைஞர் மற்றும் ஜெயலலிதா இல்லாத தமிழகத்தை எல்லோரும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு தகப்பன் சொத்துமாதிரி நினைத்து ஆளாளுக்கு அடித்துக்கொள்கிறார்கள். மெரினா என்பது தியானம் செய்வதற்கும், தர்மயுத்தம் நடத்துவதற்கும் அறிவிப்புகளை வெளிடுவதற்குமான இடமாக மாறி விட்டது.

60 ஆண்டுகளாக சாதி பிரிவினைகள், லஞ்சம், ஊழல் மற்றும் வெறுப்பு அரசியல்தான் இருந்து இருக்கிறது. இதை அவர்களே ஒருவர்மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி சொல்லி வருகிறார்கள். இப்போது ஒரு மாற்றத்துக்கான நேரம் வந்து இருப்பதாக கருதுகிறேன்.” இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

Next Story