‘கிராபிக்ஸ்’ பணிகள் தாமதம் ரஜினியின் ‘2.0’ மீண்டும் தள்ளிவைப்பு?


‘கிராபிக்ஸ்’ பணிகள் தாமதம் ரஜினியின் ‘2.0’ மீண்டும் தள்ளிவைப்பு?
x
தினத்தந்தி 19 Aug 2018 11:45 PM GMT (Updated: 19 Aug 2018 11:45 PM GMT)

ரஜினிகாந்த்-எமிஜாக்சன் நடித்துள்ள 2.0, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக ரூ.450 கோடி செலவில் தயாராகி உள்ளது. ஷங்கர் இயக்கி உள்ளார். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக வருகிறார்.

இதன் படப்பிடிப்பு 2015-ல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கடந்த வருடம் துபாயில் விழா நடத்தி பாடல்களை வெளியிட்டனர். அதன்பிறகு படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்தனர். இரண்டு மூன்று முறை ரிலீஸ் தேதிகளை அறிவித்தும் படம் வெளியாகவில்லை. படத்துக்கான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் வெளிநாடுகளில் உள்ள ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. அதில் தாமதம் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

நவம்பர் 29-ந்தேதி 2.0 திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த படத்தில் கிராபிக்ஸ் மிரட்டல்கள் இருக்கும் என்று பேசப்படுகிறது. இந்திய படங்களில் பாகுபலி கிராபிக்ஸ் சாதனைகளில் பேசப்பட்ட படமாக இருந்தது. அந்த படத்தை 2.0 மிஞ்சும் என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே படம் அடுத்த வருடத்துக்கு தள்ளிப்போகும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. திட்டமிட்டபடி நவம்பர் 29-ந்தேதி படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story