திருமணமான நடிகைகள் பற்றிய கருத்துக்கு சமந்தா எதிர்ப்பு


திருமணமான நடிகைகள் பற்றிய கருத்துக்கு சமந்தா எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 Aug 2018 11:30 PM GMT (Updated: 22 Aug 2018 5:23 PM GMT)

சமந்தா திருமணத்துக்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறார். திரைக்கு வந்த அவரது படங்கள் அனைத்துமே நல்ல வசூல் பார்த்துள்ளன.

10 வருடங்கள் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருவதை சாதனையாக பார்க்கிறார்கள். இதுகுறித்து சமந்தா கூறியதாவது:–

‘‘நான் 10 வருடங்கள் தொடர்ந்து நடிப்பதை பெரிய வி‌ஷயமாக பேசுகிறார்கள். என்னைப்போல் மேலும் சில நடிகைகள் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பழம்பெரும் கதாநாயகிகள்தான் சினிமாவில் நிலைத்து நின்றார்கள் என்று இல்லை. இப்போதும் அதிக நாட்கள் தாக்குப்பிடித்து நிற்கிறார்கள்.

திருமணமானதும் நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்து விடும் என்ற பேச்சு இருக்கிறது. இதை உடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அது நிறைவேறி இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு நான் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன. திருமணமான நடிகைகளுக்கு வரவேற்பு இருக்காது என்று திரையுலகில் இருப்பவர்கள்தான் மாயையை உருவாக்கி வைத்து இருந்தனர்.

ரசிகர்கள் யாரும் அப்படி கருதவில்லை என்பது எனது படங்கள் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது. எனக்கு முன்பும் கூட திருமணமான நடிகைகள் பலர் சாதித்து இருக்கிறார்கள். நான் இந்த அளவுக்கு உயர்வதற்கு விமர்சனங்கள்தான் காரணம். விமர்சனங்கள்தான் நம்மை உயர வைக்கின்றன. இந்த வேடத்தில் சமந்தாவால் நடிக்க முடியாது என்று யாராவது சொன்னால் அந்த சவாலை ஏற்று அதில் நடிக்கவும் கடுமையான உழைப்பை கொடுக்கவும் தயாராக இருப்பேன். எனவே விமர்சனங்கள் உயர்வுக்கு படிக்கட்டுகள்.’’

இவ்வாறு சமந்தா கூறினார்.

Next Story