உச்சம் தொட்ட சர்வதேச திரைப்படங்கள்: ஆணாதிக்க அட்டூழியத்தைச் சொன்ன ‘சொராயா’


உச்சம் தொட்ட சர்வதேச திரைப்படங்கள்:  ஆணாதிக்க அட்டூழியத்தைச் சொன்ன ‘சொராயா’
x
தினத்தந்தி 25 Aug 2018 6:35 AM GMT (Updated: 25 Aug 2018 6:35 AM GMT)

உலக வரலாற்றில் யுத்தங்களால் சிந்தப்பட்ட ரத்தத்துக்கு சமமாக, பெண்களின் ரத்தமும், கண்ணீரும் சிந்தப்பட்டே இருக்கிறது.

றப்பு நிகழ்ந்த வீடுகளில் ஆண்களை விட பெண்கள் அதிகம் கதறி அழுவதை, ஒப்பாரி வைப்பதைப் பார்த்திருப்போம். அவர்களில் பலர் இறந்தவருக்கு நெருங்கியவர்களாக இல்லாமலும் இருக்கலாம். அங்கு அழுகிற பெண்கள் அந்த இறப்புக்காக மட்டுமே அழுவதில்லை. அவர்கள் அழுவதற்கான காரணங்கள் கோடி. ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட ஏதோ ஒரு துக்கத்தை நினைத்து அழுவதற்கு, அந்த இறப்பு விழுந்த வீடு அவர்களுக்கு ஒரு களமாக பயன்படுகிறது. உண்மையில் இறப்பு நிகழ்ந்த வீடு, பெண்கள் தங்கள் பாரங்களை நினைத்து கூடி அழுது இளைப்பார ஒரு தற்காலிக கூரை அவ்வளவே. இப்படித்தான் பெண்களையும் அவர்களின் வலிகளையும் நான் புரிந்து கொள்கிறேன்.

 பெண்களுக்கு எதிரான அநீதி ஒரு புறம், பெண்கள் லெக்கின்ஸ் அணிவதால் தான் மழை பொய்க்கிறது, சமூக குற்றங்கள் நடக்கிறது என்பது போன்ற கலாசாரவாதிகளின் அக்கறை மறுபுறம் என பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி எழுதத் தொடங்கினால், பைன் மரங்கள் போதாது. எனவே ஒரு சிறு தகவலோடு இந்த வாரம் பார்க்கவிருக்கும் திரைப்படத்துக்குள் நுழைவோம்.

இந்தியாவில் 1921-ல் ஆங்கிலேயரால், குழந்தைத் திருமண தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியாவில் 10 வயதிற்கும் கீழ் சுமார் 2 லட்சம் பெண் குழந்தைகள் விதவைகளாக இருந்திருக்கின்றனர்.

1986-ம் வருடம் ஜேம்ஸ் கேவீஷல் (James Caviezel) எனும் பிரெஞ்சு-ஈரானிய பத்திரிகையாளர் ஈரானிய கிராமமான, குபாயேவை (Kupayeh) தனது காரில் கடக்கிறார். அங்கு அவரது கார் பழுதடைகிறது. காரை பழுது பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், சோரே அக்டாஸ்லூ (Shohreh Aghdashloo) என்ற பெண் மூலம் அந்தக் கிராமத்தில் சொராயா என்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை பற்றி தெரியவருகிறது. பின்னர் இந்தச் சம்பவம் ஜேம்ஸ் கேவிஷல் மூலம் பத்திரிகைகளில் வெளிவந்து உலகையே உலுக்கியது.

இந்தச் சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் 2008-ம் ஆண்டு ‘தி ஸ்டோனிங் ஆப் சொராயா எம்’
(The Stoning of Soraya M) என்ற படம் வெளியானது. பாரசீக மொழி திரைப்படமான இது, ஈரானில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் சொராயா என்ற பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட, கிராம பஞ்சாயத்தாரின் கொடூரமான தீர்ப்பு பற்றி பேசும் உண்மைக் கதை.

குபாயே.. ஈரானில் உள்ள நாகரிகமற்ற தொலைதூர கிராமம். அங்கு சொராயா என்ற பெண், தனது இரண்டு மகள்கள், இரண்டு மகன் களுடன் வசித்து வருகிறாள். சொராயாவின் கணவன் அலி ஓர் ஆணாதிக்க தடித்தனம் கொண்டவன். அவன் தன் மகன்களிடம், ‘இது ஆண்களின் உலகம். நீங்கள் ஆண் பிள்ளைகள். உன் தாயே ஆனாலும் அவள் ஒரு பெண், அவளை மதிக்க வேண்டியதில்லை’ என அந்தச் சிறுவர்கள் மனதில் விஷத்தை விதைக்கிறான்.

உண்மையில் அந்த நகரத்தில் உள்ள 14 வயது பெண் மெஹரியினை மணக்க வேண்டும் என்பது அலியின் ஆசை. அதற்காக தனது மனைவி சொராயாவை தலாக் (விவாகரத்து) செய்துவிட நினைக்கிறான். இதற்கு உதவுவதற்காக கிராம மதத் தலைவர் முல்லா ஹாசனை நாடுகிறான். முல்லா ஹாசனுக்கு சொராயாவை அடைய வேண்டுமென ஆசை இருந்தது. எனவே இவ்விஷயத்தில் முல்லா ஹாசன், அலிக்கு முழு முனைப்பாக உதவுகிறான். தலாக் செய்வதற்கான நஷ்டஈடு எதையும் ஏற்றுக் கொண்டு விலக விரும்பாத சொராயா, தன் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலை கொள்கிறாள்.

இந்தநிலையில் சொராயா மீது வீண் பழி சுமத்தி அவளை தண்டித்துவிடுவதன் மூலம், தான் நினைத்த பெண்ணை அடையமுடியும் என்ற முடிவுக்கு வருகிறான் அலி. சொராயா ஒழுக்கம் கெட்டவள்.. அவளுக்கு கிராமத்தில் வேறோர் ஆணுடன் தொடர்பு உண்டு எனக் கட்டுக் கதை உருவாக்கி விடுகிறான்.

இதற்கு முல்லாவும் துணை போக, கிராம பஞ்சாயத்து கூடுகிறது. சொராயாவின் பெற்றோர் உட்பட இருதரப்பும் வாதாடினாலும், தீர்ப்பு என்னவோ கணவன் அலியின் பக்கமே சாதகமாகிறது. ஒழுக்கம் இல்லாதவள் என குற்றம் சாட்டப்பட்ட சொராயாவை, கிராம முறைப்படி தண்டிக்க முடிவு செய்யப்படுகிறது. அதற்கு இறைவனையும், அவர் அனுமதியின்றி துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு மனிதனின் இடுப்பு உயரம் அளவிற்கு குழி ஒன்று வெட்டப்பட்டு, அதில் சொராயா உள் நிறுத்தப்படுகிறாள். அவளது கைகள் பின்புறமாக கட்டப்படுகின்றன. அவள் தண்டனையின் போது தப்பி ஓடாமல் இருக்க அவளது இடுப்பு வரை மண் கொண்டு மூடப்படுகிறது. பிறகு கிராமத்தார் ஒவ்வொருவராக தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். ஆம்.. சொராயா மீது கிராமத்தார் ஒவ்வொருவரும் கல்லை எறிகிறார்கள். இந்தக் காட்சியைக் காண, நமக்கு தனி மிருகத்தனம் வேண்டும். தத்ரூபமாக படமாக்கப்பட்ட இக்காட்சியை இளகிய குணம் கொண்டவர்களால் நிச்சயம் காண இயலாது. சொராயா துரோகத்தின் கற்களால் அடித்துக் கொல்லப்படுகிறாள்.

அவள் மீது கல் எறிவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயம், ஊர் பெண்கள் அவளை கடைசியாக ஒரு முறை வந்து பார்த்து வருத்தம் தெரிவித்துச் செல்கிறார்கள்.



அவர்களிடம் சொராயா, ‘எனக்கு சாகப்போவதைப் பற்றி கூட பயமில்லை. ஆனால் ஒருவர் பின் ஒருவராக என் மீது கல் எறியப்போகும் வலியை நினைத்தால்……’ என குமுறி அழுகிறாள்.

ஆனால் பயனில்லை.. அது ஆண்களின் கிராமம். அங்கு ஆண்களின் வல்லாட்சி நடக்கிறது. தண்டனை நிறைவேற்றப்பட்ட மறுநாள், கிராமம் வழக்கம் போல் இயங்குகிறது என்பதை காட்சிப்படுத்திய வகையில், இயக்குனர் சைரஸ் நவ்ராஸ்டே ‘இது அக்கிராமத்தில் முதன் முதலாக நடக்கும் நிகழ்வல்ல’ என்பதை நமக்கு புரியவைக்கிறார்.

ெகண்ட் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் 2009, லாஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் பெஸ்டிவல் 2009, சாட்டிலைட் அவார்ட்ஸ் 2009, டொரான்டோ இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் 2008 என பல்வேறு சர்வதேச விருதுகளை இந்தத் திரைப்படம் பெற்றுள்ளது.

சர்வதேச கவனத்தை ஈர்த்த சொராயா மானுட்செரியின் 9 வயது புகைப்படம் மட்டுமே உலகம் காண கிடைத்திருக்கிறது. பெண்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத ஆண்களின் இயலாமைதானே இப்படியான சம்பவங்களின் தொடர்ச்சிக்கு காரணம்?

Next Story