ஜெயம்ரவி, சித்தார்த் டுவிட்டர் கணக்கு முடக்கம்?


ஜெயம்ரவி, சித்தார்த் டுவிட்டர் கணக்கு முடக்கம்?
x
தினத்தந்தி 28 Aug 2018 10:30 PM GMT (Updated: 28 Aug 2018 8:41 PM GMT)

நடிகர், நடிகைகள் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குகள் வைத்து தங்கள் படங்கள் குறித்து விவரங்களையும், சமூக, அரசியல் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர்களை சமூக வலைத்தளத்தில் பின் தொடர்கிறார்கள். ரசிகர்களுடன் நடிகர்–நடிகைகள் வலைத்தளத்திலேயே கேள்விகளுக்கு பதில் அளித்து கலந்துரையாடுவதும் உண்டு. இந்த கணக்குகளில் வி‌ஷமிகள் ஊடுருவி முடக்குவதும் அடிக்கடி நடக்கின்றன.

இப்போது நடிகர்கள் ஜெயம்ரவி, சித்தார்த் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை முடக்கி உள்ளனர். இது ரசிகர்கள் மத்தியிலும், பட உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம்ரவி கூறும்போது, ‘‘எனது டுவிட்டர் கணக்கில் யாரோ புகுந்து முடக்கி உள்ளனர். அடுத்த அறிவிப்பு வருவது வரை யாரும் எனது டுவிட்டர் கணக்கில் நடப்பதை கவனிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். சித்தார்த்தும் தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார். சித்தார்த் செல்போனுக்கு உங்கள் டுவிட்டரை முடக்கி இருப்பதாகவும் சைபர் தாக்குதல் நடந்துள்ளது என்றும் குறுந்தகவல் வந்துள்ளது.

இதனை சித்தார்த் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ‘‘டுவிட்டரை முடக்குகிறவர் யாரோ எனது செல்போன் நம்பரை பயன்படுத்தியுள்ளார். எனது போனில் உள்ள எண்களுடன் யாரோ சாட்டிங்கும் செய்கிறார். என்ன நடக்கிறது என்று புரியவில்லை’’ என்று கூறியுள்ளார்.


Next Story