ஞானவேல்ராஜா புதிய படத்தின் பெயர், ‘தேள்’ பிரபுதேவா நடிக்கிறார்


ஞானவேல்ராஜா புதிய படத்தின் பெயர், ‘தேள்’ பிரபுதேவா நடிக்கிறார்
x
தினத்தந்தி 29 Aug 2018 11:00 PM GMT (Updated: 29 Aug 2018 5:39 PM GMT)

தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா பிரபுதேவாவை வைத்து, ‘தேள்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

சில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, கொம்பன், பிரியாணி, மாஸ், மெட்ராஸ் உள்பட பல படங்களை தயாரித்தவர், கே.ஈ.ஞானவேல்ராஜா. இவர் நடிகர் சிவகுமாரின் உறவினர் ஆவார். சூர்யா, கார்த்தி ஆகிய இருவரை வைத்தே படங்களை தயாரித்து வந்த ஞானவேல்ராஜா முதல் முறையாக ஆர்யாவை வைத்து, ‘கஜினிகாந்த்’ படத்தை தயாரித்தார்.

அடுத்து இவர், பிரபுதேவாவை வைத்து, ‘தேள்’ என்ற படத்தை தயாரிக்கிறார். ‘தூத்துக்குடி,’ ‘மதுரை சம்பவம்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார் கதை–திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார்.  

பிரபுதேவா–ஹரிகுமார் இருவருமே நடன இயக்குனர்களாக இருந்து கதாநாயகன் ஆனவர்கள். படங்களை இயக்கியும் இருக்கிறார்கள். இவர்கள் கூட்டணியில், ‘தேள்’ படத்தை தயாரிப்பது பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியதாவது:–

‘‘ஒரு புகழ் பெற்ற நடன இயக்குனரை, இன்னொரு நடன இயக்குனர் இயக்குவது வெறும் எதேச்சையான நிகழ்வு மட்டும் அல்ல. நடனத்தில் அனுபவம் மிகுந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், உணர்வுப்பூர்வமான ஒரு அதிரடி படத்தை கொடுக்க இருக்கிறார்கள். இது, எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.’’

இவ்வாறு ஞானவேல்ராஜா கூறினார்.

Next Story