“கிசுகிசுவில் சிக்காதது எப்படி?” -நடிகர் ஆதி


“கிசுகிசுவில் சிக்காதது எப்படி?” -நடிகர் ஆதி
x
தினத்தந்தி 10 Sep 2018 9:45 PM GMT (Updated: 10 Sep 2018 7:10 PM GMT)

“கிசுகிசுவில் சிக்காதது எப்படி?” -நடிகர் ஆதி

ஆதி நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘யு டர்ன்.’ கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம், அதே டைரக்டரின் (பவன்குமார்) இயக்கத்தில் தமிழில் தயாராகி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஆதி கூறியதாவது:-

“யு டர்ன் படத்தில், நான் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறேன். நேர்மையான அதிகாரி. கதாநாயகி சமந்தா ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். அவருக்கு நான் உதவுவது போல் கதை அமைந்துள்ளது. இந்த படத்தில் நான் நடிப்பதற்கு டைரக்டர் பவன்குமார்தான் காரணம். அவர் கன்னடத்தில் ‘லூசியா,’ ‘யு டர்ன்’ ஆகிய 2 படங்களை இயக்கியிருக்கிறார். இந்த 2 படங்களுமே மிக குறைந்த பட்ஜெட்டில் தயாராகி, அதிக வசூல் செய்த படங்கள். புத்திசாலித்தனமான திரைக்கதைகள். அதனால்தான் ‘யு டர்ன்’ படத்தில் நடிக்க உடனே சம்மதித்தேன்.

இதில் நரேன், ‘ஆடுகளம்’ நரேன், பூமிகா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் இருக்கிறது. படத்தின் கதாநாயகி சமந்தா ஒரு இடத்தில், போக்குவரத்து விதியை மீறி விடுகிறார். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை” என்றார், ஆதி.

‘மிருகம்’ படத்தில் அறிமுகமாகி, ஈரம், அய்யனார், ஆடுபுலி, அரவாண், மறந்தேன் மன்னித்தேன், வல்லினம், கோச்சடையான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம், யு டர்ன் என இதுவரை ஆதி 11 படங்களில் நடித்து இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கதாநாயகி இவருக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், இவர் இன்னும் ‘கிசு கிசு’வில் சிக்கவில்லை.

“தமிழ்-தெலுங்கு பட உலகின் அழகான-இளம் கதாநாயகர்களில் ஒருவரான நீங்கள் இதுவரை கிசு கிசுவில் சிக்காதது எப்படி?” என்று ஆதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “என்னைப் பற்றி கிசு கிசு வராமல் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்கிறேனோ, என்னவோ” என்று சிரித்தபடி பதில் அளித்தார்.

Next Story