“என் மீது சிலருக்கு பொறாமை” -நடிகர் சிவகார்த்திகேயன்


“என் மீது சிலருக்கு பொறாமை” -நடிகர் சிவகார்த்திகேயன்
x
தினத்தந்தி 12 Sep 2018 11:00 PM GMT (Updated: 12 Sep 2018 8:49 PM GMT)

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’ திரைக்கு வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’ திரைக்கு வருகிறது. அடுத்து ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். நகைச்சுவை படமாக இது தயாராகிறது. இதில் ஜோடியாக நயன்தாரா வருகிறார். ரவிகுமார் இயக்கத்தில் விஞ்ஞான படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

சினிமா வாழ்க்கை குறித்து சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் நடித்துள்ள சீமராஜா அதிரடி, நகைச்சுவை, குடும்ப உறவுகள், காதல் கதையம்சத்தில் தயாராகி உள்ளது. இது ராஜா கதை. ராஜாவாகவும், இந்த காலத்து இளைஞனாகவும் நடித்து இருக்கிறேன். தமிழ் மண் மீதான ஈர்ப்பை படம் பிரதிபலிக்கும். சண்டை காட்சிகளை ரத்தம், குரூரம் இல்லாமல் படமாக்கி இருக்கிறோம்.

ரஜினிகாந்தின் எந்த மாதிரி படங்களை திரையில் பார்த்து ரசித்தோமோ, அதுமாதிரி கதைகளில் நான் இப்போது நடிப்பது சந்தோஷம்தான். ஆறு மாதத்துக்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வியாபார ரீதியிலான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

நான் இப்போது இருக்கும் இடம் பற்றி சிலர் பொறாமைபடுவதாக பேச்சு இருக்கிறது. நானே இப்படி ஒரு இடத்துக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சினிமாவுக்குள் இருக்கத்தான் ஆசைப்பட்டேன். இங்கு யாரும் ஒரு இடத்தை அவர்களாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த இடம் கொடுக்கப்படுவதுதான். அதற்கு பொறாமைப்பட தேவை இல்லை.

மெஜாரிட்டி மக்கள் என்னை அவர்கள் வீட்டு பையன் மாதிரி நினைக்கிறார்கள். ஒரு குட்டிப்பையன் என்னிடம் வந்து உங்கள் படங்கள் நன்றாக ஓட வேண்டும் நான் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னான். இதைவிட பெரிய கொடுப்பினை என்ன இருக்கிறது. எதிர்மறை, பொறாமை என்பது சிறிய சதவீதம்தான். அதைப்பற்றி கவலைப்பட தேவை இல்லை.”

இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.

Next Story