கன்னியாஸ்திரி பாலியல் புகார்: ‘‘குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்’’ –மஞ்சு வாரியர்


கன்னியாஸ்திரி பாலியல் புகார்: ‘‘குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்’’ –மஞ்சு வாரியர்
x
தினத்தந்தி 14 Sep 2018 9:30 PM GMT (Updated: 14 Sep 2018 5:07 PM GMT)

கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகை மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவர் அங்குள்ள கன்னியாஸ்திரியை 2014–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை 13 தடவை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிராங்கோ மூலக்கல் மீது இதுவரை தேவாலய நிர்வாகமும், போலீசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி  பிரபல    நடிகை மஞ்சு வாரியர் தனது ‘பேஸ் புக்’கில் கருத்து தெரிவித்து இருக்கிறார். ‘‘இந்த பிரச்சினையில் நான், கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக இருப்பேன். குற்றம்சாட்டப்பட்டுள்ள பிராங்கோ மூலக்கல் கைது செய்யப்பட வேண்டும். குற்றவாளி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்வதில் தாமதம் கூடாது. 

அப்படி தாமதமானால், அது புனிதமான பேராலயத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை அலட்சியப்படுத்துவதாக அமையும். ஏசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் யாரும் குற்றவாளிக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். மிக விரைவில் நியாயம் கிடைக்க வேண்டும்.’’

இவ்வாறு மஞ்சுவாரியர் கூறியிருக்கிறார்.

Next Story