ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய விஜய்


ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய விஜய்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:45 PM GMT (Updated: 15 Sep 2018 6:29 PM GMT)

விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் திருமணத்திற்கு சென்ற நடிகர் விஜய் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார்.

நடிகர் விஜய் தற்போது, ‘சர்க்கார்’ படத்தை முடித்து கொடுத்து விட்டு, அட்லீ இயக்கும் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார்.

தெளிவான பார்வை, நிதானமான பேச்சு, தொலைநோக்கு சிந்தனை, ரசிகர்களை மக்கள் இயக்கம் மூலம் சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் திரையில் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் வெகுவாக விரும்பக்கூடிய மனிதராக வலம் வருகிறார், விஜய். இதற்கு உதாரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு சத்தமே இல்லாமல் உதவியதை கூறலாம்.

விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கும் ஆனந்த் என்பவரின் திருமணம் புதுச்சேரியை அடுத்த நாவற்குளத்தில் நடைபெற்றது.

அப்போது விஜய் வருகிறார் என தெரிந்து ரசிகர்கள் கூடியதால் திருமண மண்டபமே திக்குமுக்காடிப் போனது. விஜய் மேடைக்கு வந்து மணமக்களை வாழ்த்துவார் என அறிவிக்கப்பட்டதால், பல ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு மண மேடையில் ஏறியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

விஜய் மனைவி சங்கீதாவுடன் மணமேடை ஏறி, மணமக்களை வாழ்த்தியபோது, ரசிகர்களின் நெரிசலை ‘பவுன்சர்’களாலும் சமாளிக்க முடியவில்லை. அப்போது அவருடைய காலில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மண்டபத்திலிருந்து வெளியே வந்தபோதும், ரசிகர்கள் ஆரவாரம் செய்ததால், பரபரப்பு நிலவியது. பிறகு காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து விஜய்யை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். 

திருமண விழா, விஜய் ரசிகர்களின் விழாவாக மாறிவிடக்கூடாது என திட்டமிட்டு, திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்கு முன்பே வந்துள்ளார், விஜய். அப்படியிருந்தும் எதிர்பாராத விதமாக இந்த தள்ளுமுள்ளு நிகழ்ந்துவிட்டது.

Next Story