கன்னியாஸ்திரி விவகாரத்தில் கோபப்பட்ட மோகன்லால்


கன்னியாஸ்திரி விவகாரத்தில் கோபப்பட்ட மோகன்லால்
x
தினத்தந்தி 16 Sep 2018 10:45 PM GMT (Updated: 16 Sep 2018 9:09 PM GMT)

கன்னியாஸ்திரி விவகாரம் குறித்த கேள்விக்கு மோகன்லால் கோபமடைந்தார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ மூலக்கல் அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 2014 முதல் 2016 வரை 13 முறை கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது.

பிஷப் மீது தேவாலய நிர்வாகமும் போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நடிகைகளும் ஆதரவு தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை கிடைப்பது வரை கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக இருப்பேன் என்று நடிகை மஞ்சு வாரியர் கூறினார்.

நடிகை பார்வதியும் பிஷப் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார். இந்த நிலையில் கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க வந்த மோகன்லாலிடம் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்தும், கன்னியாஸ்திரிகள் போராட்டம் குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்த மோகன்லால், “இங்கு நல்ல விஷயம் நடந்து கொண்டு இருக்கிறது. இதுபோன்ற கேள்வி வெட்கப்படத்தக்கது. இங்கு நடக்கும் நிகழ்ச்சிக்கும் கன்னியாஸ்திரி சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. இங்கு மழை வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டு உள்ளது. நீங்கள் வேறு எதையோ கேட்கிறீர்கள்” என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.



Next Story