கன்னியாஸ்திரி பற்றிய கேள்வி: மன்னிப்பு கேட்ட மோகன்லால்


கன்னியாஸ்திரி பற்றிய கேள்வி: மன்னிப்பு கேட்ட மோகன்லால்
x
தினத்தந்தி 18 Sep 2018 12:58 AM GMT (Updated: 18 Sep 2018 12:58 AM GMT)

மோகன்லால் பேசியது சமூக வலைத்தளத்தில் விவாதமாக மாறியது. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி பற்றிய கேள்விக்கு மோகன்லால் பதில் அளித்து இருக்கலாம் என்று பலரும் விமர்சித்தனர்.

கேரளாவில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் மோகன்லாலிடம் கேரள மாநிலத்தில் பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கன்னியாஸ்திரி மற்றும் அதுதொடர்பாக நடந்து வரும் போராட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் “இங்கு நல்ல விஷயம் நடக்கும்போது இப்படி தேவை இல்லாத கேள்வி கேட்க உங்களுக்கு வெட்கம் இல்லையா? இந்த நிகழ்ச்சிக்கும் கன்னியாஸ்திரி பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம். மழையால் பேரழிவு நடந்துள்ளது. அதைவிட்டு நீங்கள் எதைப்பற்றியோ கேட்கிறீர்கள்” என்று கோபப்பட்டு பேசினார்.

மோகன்லால் பேசியது சமூக வலைத்தளத்தில் விவாதமாக மாறியது. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி பற்றிய கேள்விக்கு மோகன்லால் பதில் அளித்து இருக்கலாம் என்று பலரும் விமர்சித்தனர். இதைத்தொடர்ந்து மோகன்லால் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் மோகன்லால் கூறியிருப்பதாவது:-

“கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை எனது அறக்கட்டளை சார்பில் நடத்தினேன். அப்போது ஒரு செய்தியாளர் கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம் குறித்து கேட்டார். அது நேரத்துக்கு பொருந்தாத கேள்வியாக இருந்தது. ஆனாலும் மாநிலத்தை பொறுத்தவரை கன்னியாஸ்திரி விவகாரம் தொடர்பான கேள்வி அவசியமானது. அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் மனநிலையில் நான் இல்லை. அதனால்தான் கடுமையாக நடந்துகொண்டேன். இந்த விஷயத்தை பெரிதுபடுத்தாமல் என்னை மூத்த சகோதரர்போல் கருதி மன்னிக்கும்படி அந்த செய்தியாளரிடம் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு மோகன்லால் கூறியுள்ளார்.

Next Story