திருமணத்தை நிறுத்திய நடிகை விளக்கம்


திருமணத்தை நிறுத்திய நடிகை விளக்கம்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:15 PM GMT (Updated: 18 Sep 2018 5:44 PM GMT)

கன்னடத்தில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ராஷ்மிகா. இவர் நடித்துள்ள கிரிக் பார்ட்டி, அஞ்சனி புத்ரா, ஜமக் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படமும் வெற்றி பெற்றது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

ராஷ்மிகாவும் கன்னட படங்களில் கதாநாயகனாக நடிக்கும் ரக்ஷித்தும் காதலித்தனர். இருவரும் கிரிக் பார்ட்டி படத்தில் ஜோடியாக நடித்தபோது நெருக்கமாகி காதல்வயப்பட்டனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் பெங்களூருவில் நிச்சயதார்த்தமும் நடந்தது.

அதன்பிறகு வேறு கதாநாயகர்களுடன் ராஷ்மிகா நெருக்கமாக நடித்து வந்தார். நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு இப்படி நடிக்கலாமா? என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராஷ்மிகாவும், ரக்ஷித்தும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. திருமணத்தையும் ராஷ்மிகா நிறுத்திவிட்டார்.

திருமணத்தை நிறுத்தியது குறித்து முதல் தடவையாக விளக்கம் அளித்து ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருமணம் நின்றது குறித்து என்மீது விமர்சனங்கள் வருகின்றன. இந்த விவகாரத்தில் பல்வேறு கதைகள், கருத்துகள் பரவி உள்ளன. நானோ, ரக்ஷித்தோ அல்லது வேறு யாராக இருந்தாலும் சினிமா துறையில் இதுபோன்ற கதைகளை தவிர்த்துவிட்டு செல்ல முடியாது. ஆனாலும் நாணயத்தை போல எல்லா கதைகளுக்கும் இரண்டு பக்கம் உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தெலுங்கு, கன்னட படங்களில் தொடர்ந்து நடிப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

Next Story