பிரபல வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு


பிரபல வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை  பாலியல் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Sep 2018 10:37 AM GMT (Updated: 26 Sep 2018 10:37 AM GMT)

ரஜினியின் 'காலா' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பிரபல நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பை,

காலா படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். தமிழில் பொம்மலாட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவர் புதிது என்றாலும், பாலிவுட்டில் பிரபலமான நடிகர். மத்திய அரசால் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ள இவர் மீது, இப்போது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருப்பவர் முன்னாள் மிஸ் இந்தியாவும், பாலிவுட் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா. தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்த தனுஸ்ரீ தத்தா தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது நானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று தனியார் தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

அதில், கூறியதாவது:-

கடந்த 2008- ம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ”ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த நானா படேகரை நான் கண்டித்த போது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்று சத்தமாக கூறினார். நானா படேகரின் இந்த செயலுக்கு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் , நடன இயக்குநர் ஆகிய அனைவரும் ஆதரவாக செயல்பட்டனர்.

இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளாகினேன். என்னுடைய குடும்பத்தாரோடு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது  அவரது ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானேன்.

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் போன்ற பெரிய நடிகர்கள் இவ்வாறான நடிகருடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அப்போது நான் புதுமுக நடிகை என்பதால் எனக்கு எதிரான செய்திகள் ஊடகங்களில் பரப்பப்பட்டன. நானா படேகரைப் போன்ற ஆட்கள் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது. என்னைப் போல தற்போது பல புதுமுகங்களும் இது போன்ற வலிகளை சுமந்து கொண்டு தான் இருக்கின்றனர் என கூறி உள்ளார்.

Next Story