மறுமணம் செய்துகொள்வது பற்றி அமலாபால் கருத்து


மறுமணம் செய்துகொள்வது பற்றி அமலாபால் கருத்து
x
தினத்தந்தி 26 Sep 2018 11:00 PM GMT (Updated: 26 Sep 2018 5:32 PM GMT)

மறுமணம் செய்துகொள்வது பற்றிய கேள்விக்கு நடிகை அமலாபால் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள படம் ‘ராட்சசன்’. இந்த படத்தை ராம்குமார் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே முண்டாசுபட்டி படத்தை இயக்கியவர். ஜி.டில்லிபாபு தயாரித்துள்ளார். ராட்சசன் படக்குழுவினர் சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது அமலாபால் கூறியதாவது:–

‘‘ராட்சசன் கதையை டைரக்டர் சொன்னபோது குழப்பமாக இருந்தது. விஷ்ணு விஷால் போனில் மீண்டும் கதையை விளக்கி சொன்னார். மிகவும் பிடித்து போனது. வித்தியாசமான கதையாக இருந்தது. எனது கதாபாத்திரமும் அழுத்தமாக இருந்தது. படமும் சிறப்பாக வந்துள்ளது. 

இந்த படம் மூலம் விஷ்ணு விஷால் நண்பராகி விட்டார். நடிகர் கனவோடு வருபவர்களுக்கு விரக்தி ஏற்பட்டால் விஷ்ணு விஷாலை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். தனது கதாபாத்திரம் சிறப்பாக அமைய நூறு சதவீதம் உழைப்பை கொடுப்பார். இது அவருக்கு திருப்புமுனை படமாக இருக்கும்.  திகில் படங்களுக்கு ரசிகர்கள் உண்டு. ராட்சசன் நமது மண்சார்ந்த திகில் படமாக இருக்கும். ஜிப்ரான் இசை படத்துக்கு பெரிய பலம். இந்த படத்தில் சொந்த குரலில் பேசி இருக்கிறேன். வேறு ஒருவரை டப்பிங் பேச வைப்பது குழந்தையை பெற்று மற்றவரிடம் கொடுப்பது போன்றது. நானே டப்பிங் பேசுவேன் என்று ஒப்பந்தம் போட்டு படங்களில் நடிக்கிறேன். 

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட விருப்பம் இருக்கிறது. இமயமலைக்கு அடிக்கடி செல்கிறேன். அங்குள்ள இயற்கையான சூழலில் மனம் இதமாகிறது. ஆன்மிக உணர்வு ஏற்படுகிறது. எனது வாழ்க்கையை மாற்றியது இமயமலைதான். அங்கு செல்வது கடவுளிடம் போவது மாதிரி இருக்கும். ஆடை படத்தில் கதைக்கு தேவையாக இருந்ததால் கவர்ச்சியாக நடிக்கிறேன்.’’

இவ்வாறு அமலாபால் கூறினார். 

மறுமணம் எப்போது செய்துகொள்வீர்கள்? என்று கேட்டபோது, ‘‘இன்னும் அதுபற்றி யோசிக்கவில்லை. முடிவு செய்யும்போது தெரிவிக்கிறேன்’’ என்றார்.

Next Story