‘பேட்ட’ படப்பிடிப்பு முடிந்ததும் புதிய படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கிறாரா?
‘பேட்ட’ படத்தை முடித்துவிட்டு மீண்டும் புதிய படமொன்றில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். உறுப்பினர் சேர்க்கையும் நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்றும், சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றும் அறிவித்து இருக்கிறார். .
தற்போது பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு வடமாநிலங்களில் 3 மாதங்களாக விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு முடியும் என்றும், அதன்பிறகு அரசியல் பணிகளில் முழுமையாக ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ‘பேட்ட’ படத்தை முடித்துவிட்டு மீண்டும் புதிய படமொன்றில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அரசியல் கட்சி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, ஏ.ஆர்.முருகதாஸ் கதை சொல்லி இருப்பது உண்மை. அவர் படத்தில் நடிப்பதா? இல்லையா? என்பதை அரசியல் சூழ்நிலைகளை பொறுத்து ரஜினி முடிவு செய்வார். எம்.எல்.ஏக்கள் பதவி நீக்க வழக்கின் தீர்ப்பினால் ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டால் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம்.
அப்படி ஒரு நிலை ஏற்படும்போது உடனடியாக கட்சி தொடங்கி சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களை ரஜினிகாந்த் நிறுத்துவார். சினிமாவை விட்டும் விலகி விடுவார். எனவே முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதை இன்னும் அவர் உறுதி செய்யவில்லை’’ என்றனர்.
Related Tags :
Next Story