‘‘வழக்கு தொடர்ந்தால் சந்திப்பேன்’’ தனுஸ்ரீதத்தா பாலியல் புகாருக்கு நானா படேகர் பதில்


‘‘வழக்கு தொடர்ந்தால் சந்திப்பேன்’’ தனுஸ்ரீதத்தா பாலியல் புகாருக்கு நானா படேகர் பதில்
x
தினத்தந்தி 28 Sep 2018 10:00 PM GMT (Updated: 28 Sep 2018 5:18 PM GMT)

தனுஸ்ரீதத்தாவின் பாலியல் புகாருக்கு நானா படேகர் பதில் அளித்துள்ளார்.

தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த தனுஸ்ரீதத்தா இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி உள்ளார். ‘‘10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பில் நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை வெளியே சொல்ல கூடாது என்று அவரது ஆட்கள் மிரட்டினார்கள். புதுமுக நடிகைகளை அவர் அடித்து இருக்கிறார். ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் நானா படேகரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க கூடாது என்றார். 

நானா படேகர் இந்தி பட உலகினர் மத்தியில் திறமையான நடிகர் என்ற நல்ல மதிப்பை பெற்றவர். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளும் வாங்கி இருக்கிறார். தமிழில் காலா படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். தனுஸ்ரீதத்தா புகாருக்கு நானா படேகர் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

‘‘என் மீது தனுஸ்ரீதத்தா கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பாலியல் பலாத்காரம் என்பதற்கு அர்த்தம் என்ன? படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் உட்கார்ந்து இருந்தோம். எங்களை சுற்றி 200 பேர் அமர்ந்து இருந்தார்கள். இதில் எப்படி பாலியல் பிரச்சினை ஏற்பட்டது. அவர் வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். யார் என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை. என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன் என்றார். 

இந்த பிரச்சினை குறித்து நடிகர் அமிதாப்பச்சனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘எனது பெயர் நானா படேகரும் இல்லை. தனுஸ்ரீயும் இல்லை. எனவே இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது’’ என்று கோபத்தோடு கூறினார்.

Next Story