‘‘மேக்கப் போடாமல் நடிக்க ஆசை’’ பட விழாவில் சத்யராஜ் பேச்சு


‘‘மேக்கப் போடாமல் நடிக்க ஆசை’’ பட விழாவில் சத்யராஜ் பேச்சு
x
தினத்தந்தி 29 Sep 2018 11:00 PM GMT (Updated: 29 Sep 2018 6:23 PM GMT)

மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்று பட விழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார்.

நோட்டா என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும் மெஹ்ரீன் பிர்ஸாடா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி உள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். நோட்டா படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது சத்யராஜ் பேசியதாவது:–

‘‘நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குனர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. அமைதிப்படை, கோ என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல் நோட்டா படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். எனக்கு பொதுவாகவே வேறு மொழியில் பேசி நடிப்பது கொஞ்சம் கஷ்டமான வி‌ஷயம். நண்பன் படத்தின் தெலுங்கு பதிப்புக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு எளிதாக பேசிவிடலாம் என நினைத்தேன். 

ஆனால் ஒரு நாள் முழுவதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேசமுடியவே இல்லை. இந்தப்படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவோ, அழகான தமிழ் உச்சரிப்புடன் வசனங்களை பேசியதுடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசியதை பார்த்து பிரமித்து போனேன். 

எல்லா படங்களிலுமே மேக்கப் போட்டே என்னை நடிக்க வைத்தனர். இதனால் இயல்பாக நடிக்க முடியாமல் சிரமப்பட்டேன். ஒரு படத்திலாவது மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. முழு படத்திலும் மேக்கப் இல்லாமலேயே வருகிறேன்.

இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

Next Story