நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு ராஜ்தாக்கரே எச்சரிக்கை


நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு ராஜ்தாக்கரே எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Oct 2018 11:00 PM GMT (Updated: 4 Oct 2018 6:56 PM GMT)

தமிழில் ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தனுஸ்ரீதத்தா தேசிய விருதுகள் பெற்ற நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

நானா படேகர் தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்தவர். இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

தன்மீது பொய்யான புகார் கூறியுள்ளதாக நானா படேகர் மறுத்தார். தனுஸ்ரீதத்தா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு தொடர்வேன் என்றும் கூறினார். நானா படேகரின் வழக்கறிஞரும், தனுஸ்ரீதத்தாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். ஆனால் தனக்கு நோட்டீஸ் வரவில்லை என்றும், மிரட்டல்களுக்கு பயப்படமாட்டேன் என்றும் தனுஸ்ரீ கூறினார்.

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியினர் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும் தனுஸ்ரீதத்தா தெரிவித்தார். இந்த நிலையில் தனுஸ்ரீதத்தாவுக்கு ராஜ் தாக்கரே தலைமையில் இயங்கும் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சல்கான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 12 நிகழ்ச்சியில் தனுஸ்ரீ கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதில் அவர் பங்கேற்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு அந்த கட்சி கடிதம் அனுப்பி உள்ளது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து தனுஸ்ரீதத்தாவுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தனுஸ்ரீக்கு ஆதரவாக பிரபல இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, டிவிங்கிள் கண்ணா, சோனம் கபூர், பரினிதி சோப்ரா, ஸ்வாரா பாஸ்கர், ரிச்சா சதா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

Next Story