கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?


கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
x
தினத்தந்தி 6 Oct 2018 12:00 AM GMT (Updated: 5 Oct 2018 5:29 PM GMT)

ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, குருசோமசுந்தரம், நவாசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் என்று நிறைய நட்சத்திர பட்டாளம் நடிக்கிறார்கள்.

சசிகுமாரும்  இப்போது  சேர்ந்து இருக்கிறார். டார்ஜிலிங், டேராடூன் பகுதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு லக்னோவில் முகாமிட்டுள்ளனர்.

இந்த மாதம் இறுதிவரை அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. படப்பிடிப்பு காட்சிகளை சிலர் திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். விஜய்சேதுபதி துப்பாக்கியுடன் ஆவேசமாக செல்லும் வீடியோவும் இப்போது இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பேட்ட படத்தின் கதையும் கசிந்துவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த படம் ரஜினிகாந்த்–நக்மா நடித்து 1995–ல் வெளிவந்து வசூலையும், வரவேற்பையும் பெற்ற ‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகம் என்று தகவல்கள் பரவி உள்ளன. ரசிகர்களும் பாட்ஷாவின் இரண்டாம் பாகமே பேட்ட என்று சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

பாட்ஷா படத்தில் முதல் பகுதியில் ஆட்டோ ஓட்டி தாய், தம்பி, தங்கையை காப்பாற்றுபவராகவும், பிளாஷ்பேக்கில் மும்பையை ஆட்டிப் படைக்கும் பயங்கர தாதாவாகவும் இரு தோற்றங்களில் நடித்து இருந்தார். பேட்ட படத்திலும் வடமாநிலத்தை ஆட்டிப்படைக்கும் தாதாவாகவும், பின்னர் தமிழ் நாட்டுக்கு திரும்பி தாதா என்பதை மறைத்து விவசாயம் செய்பவர் போல் நடிப்பதாகவும் கூறுகின்றனர்.

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது வேடத்தை கலைத்து பழைய தாதாவாக மாறி அவர்களுக்கு பக்கபலமாக நின்று எதிரிகளுடன் மோதுவது போல் திரைக்கதை அமைத்துள்ளனர் என்கிறார்கள். படக்குழுவினரும் ரஜினிகாந்த் அதிரடி சண்டை போடுபவராகவும், வேட்டி சட்டையில் எளிமையான கிராமத்து மனிதர் போன்றும் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர்.

ஆனாலும் பேட்ட படம் பாட்ஷாவின் இரண்டாம் பாகம்தானா என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. பொங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது.


Next Story