தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் : நானா படேகர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு


தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் : நானா படேகர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
x
தினத்தந்தி 7 Oct 2018 11:15 PM GMT (Updated: 7 Oct 2018 5:40 PM GMT)

தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாகவும் இந்தி படங்களிலும் நடித்துள்ள தனுஸ்ரீதத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி இருந்தார்.

2008–ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ இந்தி படத்தின் படப்பிடிப்பில் பாடல் காட்சியொன்றில் நானா படேகர் அத்துமீறி நுழைந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றார். இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆட்கள் என்னை மிரட்டினார்கள். காரில் குடும்பத்தினரோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் அவர் கூறினார். அந்த படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவரும் தமிழில் ஜீவாவுடன் ரவுத்திரம் படத்தில் நடித்தவருமான கணேஷ் ஆச்சார்யா எனக்கு நேர்ந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்றும் கூறினார்.

 இதுபோல் டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி ‘சாக்லேட்’ படப்பிடிப்பில் எனது உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நிற்கும்படி கூறினார் என்று அவர் மீதும் தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறினார். 10 வருடங்களுக்கு முன்பு தனுஸ்ரீதத்தா காரை சிலர் கும்பலாக சேர்ந்து தாக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி நடிகைகள் சிலர் தனுஸ்ரீக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில் தனுஸ்ரீதத்தா மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங், மராட்டிய நவநிர்வான் சேவா கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்து இருப்பதாக தனுஸ்ரீதத்தா கூறினார்.

இதுகுறித்து அவரது வக்கீல் கூறும்போது, ‘‘தனுஸ்ரீதத்தா அளித்த புகாரின் பேரில் நானா படேகர் மீது 354 (மான பங்கம் செய்தல்) 354(ஏ), 34 மற்றும் 509 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க தவறினால் கோர்ட்டுக்கு செல்வோம்’’ என்றார்.

Next Story