நடிகைகள் எதிர்ப்பு: திலீப் விவகாரத்தில் மோகன்லால் பதில்


நடிகைகள் எதிர்ப்பு: திலீப் விவகாரத்தில் மோகன்லால் பதில்
x
தினத்தந்தி 8 Oct 2018 10:45 PM GMT (Updated: 8 Oct 2018 5:38 PM GMT)

நடிகர் திலீப் விவகாரத்தில் நடிகைகள் எதிர்ப்புக்கு நடிகர் மோகன்லால் பதில் அளித்துள்ளார்.

நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கினர். 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வந்த அவரை சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற மோகன்லால் பொதுக்குழுவை கூட்டி மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டார். 

இதற்கு நடிகைகள் ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திலீப்பை சேர்க்கும் முடிவை நடிகர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது. ஆனாலும் திலீப்பை சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு விளக்கம் அளிக்கும்படி மோகன்லாலுக்கு நடிகைகள் கடிதம் அனுப்பினர். 

இதுகுறித்து ரேவதி கூறும்போது, ‘‘நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா இல்லையா என்பதை நடிகர் சங்கம் தெளிவுப்படுத்தும்படி கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் இல்லை’’ என்று கண்டித்தார். இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கொச்சியில் நடந்தது. 

இந்த கூட்டம் முடிந்ததும் மோகன்லால் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘நடிகைகள் கடிதம் சம்பந்தமாக திலீப் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து செயற்குழுவில் விவாதிக்கவில்லை. சங்கத்தின் பொதுக்குழு கூட்டித்தான் இதுகுறித்து முடிவு எடுக்க முடியும். அதுவரை நடிகைகள் பொறுத்து இருக்க வேண்டும்’’ என்று கூறினார். கேரள வெள்ள பாதிப்புக்கு அபுதாபியில் நட்சத்திர கலைவிழா நடத்தி நிதி திரட்டவும் செயற்குழுவில் முடிவு செய்துள்ளனர்.

Next Story