புற்றுநோய் சிகிச்சை பற்றி சோனாலி பிந்த்ரே உருக்கம்
நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோய் சிகிச்சை பற்றி சமூக வலைத்தளத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சோனாலி பிந்த்ரே, ‘பம்பாய்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி உள்ளார். இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார். சமீபத்தில் சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக சொல்லி ரசிகர்களை அதிரவைத்தார்.
இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமுடியை அகற்றி மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார். சிகிச்சை பெறும் தகவல்களை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வரும் அவர் இப்போது தனது புதிய பதிவில் கூறியிருப்பதாவது:-
“இரண்டு மாதங்களில் சில நாட்கள் நலமாகவும், சில நாட்கள் மோசமாகவும் இருந்தன. ஒரு சில நாட்கள் எனது கைவிரலை சிறிதளவு உயர்த்தவும் கஷ்டப்பட்டேன். சிரிப்பதிலும் வலியை உணர்ந்தேன். கிமோதெரபிக்கு பிறகு அறுவை சிகிச்சை நடந்தது. அந்த நாட்கள் மிகவும் துயரமானதாக இருந்தது. உடலில் தொடங்கிய வலி மனம் முழுவதையும் ஆக்கிரமித்தது.
அப்போது ஒவ்வொரு நிமிடமும் என்னுடன் நானே யுத்தம் நடத்துவதுபோல் இருந்தது. எல்லா நேரமும் நமக்கு மகிழ்ச்சி இருக்காது. நடிப்பதால் லாபம் இல்லை. அதனால் பல தடவை அழுது இருக்கிறேன். ஆனாலும் இவை கொஞ்ச நேரம்தான். எதிர்மறை உணர்வுகள் பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும். தூக்கம் சிறந்த நிவாரணி.
எனக்கு சிகிச்சை தொடர்கிறது. உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய எண்ணம்.”
இவ்வாறு சோனாலி பிந்த்ரே கூறினார்.
Related Tags :
Next Story